
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி. இவரது கணவர் அதிமுக ஒன்றியச் செயலர் சிங்காரவேலு. இவர் அரசு விதிமுறைகளை மீறி அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், சிங்காரவேலு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்சாரம் திருடியதாகவும், அரசு கட்டடப் பணிகளுக்கு கொற்கையிலிருந்து மணல் திருடியதாகவும் வட்டாட்சியர் காளிஸ்வரன் புகார் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்காரவேலு மேற்கொண்ட பணிகள் தரமற்றதாக இருந்தால் ஊராட்சி பொறியாளர் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து வழக்கு என பல்வேறு முறைகேடுகள், மிரட்டல்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 5-ஆவது வார்டு உறுப்பினர் ஞானசெளந்தரி மற்றும் உறுப்பினர்கள் ராஜா, சுரேந்திரன், செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பையா, புகார் அளித்துள்ள உறுப்பினர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிங்காரவேலு ஆகியோரை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள 1.3.2016 அன்று உத்தரவிட்டார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் புகார் அளித்த உறுப்பினர்களிடம் நேரில் விசாரித்து அவர்களது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து கொண்டார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட சிங்காரவேலு ஆட்சியரின் விசாரணைக்கு வரவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் கேட்டபோது, குற்றம்சாட்டப்பட்ட சிங்காரவேலு நேரில் வர இயலவில்லையென்றும், அதற்கான தன்னிலை விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். இப்பிரச்னை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
THANKS
DINAMANI.COM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக