ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொதுக்குழுக் கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டார தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் வேதரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிரிஜா, விஜயா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் தெ.வேதரத்தினம் வரவேற்றார். கூட்டத்தில், 2013 ஜனவரி மாதத்தில் ஆசிரியர்களின் எல்ஐசி சந்தா தொகையை பிடித்தம் செய்ததை முறையாக அவரவர் கணக்கில் வரவு வைக்காததை பலமுறை நேரில் வலியுறுத்தி கேட்டும், சரிசெய்து கொடுக்காத திருத்துறைப்பூண்டி எல்ஐசி கிளை அலுவலகத்தின் போக்கை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்பது. பணி மூப்பு பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, கவுன்சிலிங் முறையாக நடைபெற உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்வது. திருத்துறைப்பூண்டியில் புதிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் கட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட செயலரும், மாநில துணைச் செயலாளருமான மதிவாணன் ஆகஸ்ட் 1ம்தேதி சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். வட்டார பொறுப்பாளர்கள் மெய்யநாதன், அரிகிருஷ்ணன், முருகையன், குணசேகரன், முருகானந்தம், செல்வமணி ஆகியோர் பேசினர். வட்டார பொருளாளர் அருள்ராஜ் நன்றி கூறினார்.

நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டம் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

திருத்துறைப்பூண்டி  பகுதியில் கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 3 லட்சத்து 2,400 நெல் மூட்டைகள் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கீழப்பாண்டி, பள்ளங்கோயில், விளக்குடி, கொக்கலாடி, சுந்தரபுரி ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் ரயில் வேகன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் திருத்துறைப்பூண்டியில் ரயில் வசதி இல்லாததால் திருவாரூர் மற்றும் நீடாமங்கலம், பேரளம் போன்ற பகுதியில் உள்ள ரயில் நிலையம் மூலம் வேகனில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் லோடு ஏற்றி திருவாரூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் வேகன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு இங்குள்ள லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் அக்ரோ சீனிவாசன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை இந்த பகுதியில் உள்ள லாரிகள் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிமாட்டங்களுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக  அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

20132014ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள லாரிகளுக்கு நெல் மூட்டைகள் லோடு ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இங்கிருந்து நீடாமங்கலம், பேரளம் பகுதிகளுக்கு லோடு ஏற்றப்பட்டது. தற்போது லோடு ஏற்ற அனுமதி வழங்காததால் தாலுகாவில் உள்ள  324 லாரிகளில் வேலைசெய்யும் 400க்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். எனவே லாரிகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்கா விட்டால் வருகிற 10ம்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka