சனி, 30 ஏப்ரல், 2016

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்தது திருவாரூர் பிரசாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்தது என திருவாரூர் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

வைகோ பிரசாரம்

திருவாரூரில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரசாரம் செய்தார். அதை முடித்து கொண்டு பிரசார வேனில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் எல்லையான நாலுகால் மண்டபம் அருகே தி.மு.க.வினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து வைகோ திருவாரூர் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 65 சதவீதம் வாக்காளர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர்கள் முழுமையாக வாக்களித்து, புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய தேர்தலில் வெற்றியை பெற்று தருவது 1½ கோடி புதிய வாக்காளர்கள் தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் தருவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து விட்டன. அந்த பாவ காசை வாங்காதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மதுவை ஒழிப்போம். கல்வி கடன்களை அரசே ஏற்கும். வர்த்தகர்களை பாதிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்போம். லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம். மீத்தேன் திட்டத்தை முற்றிலும் தடுப்போம்.

காவிரி பிரச்சினை

கருணாநிதியை பற்றி பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனாலும் எனக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதை நான் பொறுமையாக இருந்து வேடிக்கை பார்த்தேன், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்தது. மீத்தேன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முல்லை பெரியாறு பிரச்சினையில் தி.மு.க. போராடவில்லை. மதுரையில் ஜல்லிக்கட்டுவிற்கு போராட்டம் அறிவித்துவிட்டு கடைசியில் மத்திய அரசுக்கு பயந்து வாபஸ் வாங்கியது தி.மு.க.. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதி ஒரு பேட்டியில் 3-வது அணி எங்கே இருக்கிறது என கேட்டார். ஆனால் ஜெயலலிதாவோ தி.மு.க. தான் 3-வது அணி என கூறி உள்ளார். எனவே திருவாரூர் மக்களே ஒரு முறை வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள். அந்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். தி.மு.க., அ.தி.மு.கவை தூக்கி எறியுங்கள். நமது வேட்பாளர் மாசிலாமணியை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு வைகோ கூறினார்.

பிரசார நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பாலாஜி, த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் வடிவழகன், செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

பிரசார நிகழ்ச்சியை தொடர்ந்து மக்கள் நல கூட்டணியினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ம.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரூர்சீனுவாசன் தலைமையில் திருவாரூர் பஸ் நிலையத்தில் சாலை மறியல் செய்தனர். இதேபோல் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் மக்கள் நலக்கூட்டணியினர் வைகோவுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக தெருமுனை பிரசாரம்

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் தெருமுனை பிரசாரம் புதிய பஸ் நிலையம் அருகில் மற்றும் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் தலைமை வகித்தார். நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், முன்னாள் அவை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தலைமை கழக பேச்சாளர் மதுரை சாதுராஜ், திமுக வேட்பாளர் ஆடலரசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பேசினார். காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் சுரேஷ், திமுக மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், சக்திவேல், ஜாகீர் உசேன், நகர துணை செயலாளர்கள் முத்துகுமார் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்ட நான்கு தொகுதிகளில் 120 வேட்பு மனுக்கள் தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 86 வேட்பாளர்கள் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக வடக்கு மாவட்ட செயலாளர் சு. கணேசன் (37), சுயேச்சையாக வடகரையைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மடப்புரம் த. செல்வராஜ் (52), சென்னை பட்டாபிராமபுரம் மீனாட்சிசுந்தரம் (34) ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் சுயேச்சையாக திருக்களாரைச் சேர்ந்த பசுபதி (42), திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முருகேசன் (50) ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் மோகன், மூர்த்தி, ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன், விஜயன், கலைவேந்தன், பெர்னாட்ஷா ஆகிய 7 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபியிடம் பாமக வேட்பாளர் பாலசுப்பிரமணியன், அக்கட்சியின் மாற்று வேட்பாளர் கங்காதரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஜேஆர்எஸ்.பாண்டியன், பகுஜன் சமாஜ்வாதி வேட்பாளர் கலையரசன், சுயேச்சை வேட்பாளர்களான மாரிமுத்து, சம்பத், ராஜா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் இறுதி நாள் வரை அதிமுக 8, திமுக 6, காங். 2, பாஜ 6, பிஎஸ்பி 3, இந்தியக் கம்யூ. 4, மார்க்சிஸ்ட் 2, தேமுதிக 2, தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கம் 1, நாம் தமிழர் கட்சி 8, அன்பு உதயம் கட்சி 1, பாமக 8, இந்திய ஜனதா 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 3, யூத் அண்டு ஸ்டூடண்ட் பார்ட்டி 2, பார்வர்டு பிளாக் 1, மக்கள் மனது கட்சி 1 மற்றும் சுயேச்சை 26 என மொத்தம் 86 பேர் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் (சனிக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் : புதிய ஆட்சியரா வெங்கடேஷ்

தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரூர், திருவாரூர், திருவண்ணாமலை, நெல்லை. புதுக்கோட்டை போன்ற 5 மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் ஆட்சியராக காக்கர்லா உஷா, திருவாரூர் ஆட்சியராக வெங்கடேஷ், திருவண்ணாமலை ஆட்சியராக பூஜா குல்கர்ஷி, நெல்லை ஆட்சியராக சமயமூர்த்தி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியராக ஸ்வர்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு மற்றும் தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.



Tks

Dinakaran



வியாழன், 28 ஏப்ரல், 2016

எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

பிளஸ் டூ முடித்த பின்பு எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர்களின் விருப்பமாகும். பல பெற்றோர்களும் இதையே விரும்புகின்றனர். இருப்பினும் கட் ஆப் மதிப்பெண் உச்ச நிலையில் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் கிடைக்காமற் போவதும் ஒரு சில புள்ளி மதிப்பெண்களில்தான் என்பதே இன்றைய நிலையாகும். +2 இரண்டாமாண்டுப் பயிலும் போதே திட்டமிட்டுப் படித்தால், எந்தச் சிக்கலுக்கும் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்திப் படித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் படிப்பதற்கு இடம் பெற்று விடலாம். ஒருவேளை எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால்?

மனம் தளர வேண்டியதில்லை. மருத்துவ படிப்புகளும், மருத்துவம் தொடர்பான படிப்புகளும் நிறைய உள்ளன:


பி.டி.எஸ் (Bachelor of Dental science):

பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பிற்கும் 17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பின் கால அளவு 5 ஆண்டுகளாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவம் படிக்கக் கட்டணம் குறைவு. ஆனால் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்பை முடிக்க ஏறத்தாழ 12 இலட்ச ரூபாய் வரை செலவாகும். முன்பு மருத்துவம் சார்ந்த தேர்வுகளுக்கு நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால் இப்போது அரசால் நடத்தப்படுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்கின்றன.

5 ஆண்டுகள் படிப்பில் 4 ஆண்டுகள் வகுப்பறையிலும் ஓராண்டு பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். 15,000 மாணவர்கள் இப்படிப்பில் வருடந்தோறும் சேர்க்கப்படுகின்றனர்.



பி.எச்.எம்.எஸ் (Bachelor of Homeopathic medicine & surgery):

பி.எச்.எம்.எஸ். எனப்படும் ஹோமியோ மருத்துவம் மற்றும் சிகிச்சைப் படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும். இப்படிப்பிற்கு ஏறத்தாழ நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.

பி.எச்.எம்.எஸ் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றுப்படிப்பாகத் திகழ்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்பில் இடம் கிடைக்காதோர் இப்படிப்பில் சேர்கிறார்கள். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவமுறை இதுவாகும். 5.5 ஆண்டு படிப்பில் ஒரு வருடம் பயிற்சிக்குரிய காலமாகும்.



பி.எ.எம்.எஸ் (Bachelor of Ayurvedic medicine and surgery):

பி.எ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் பயில விரும்புவோர் 5.5 ஆண்டுகள் படிக்க வேண்டும். ஏறத்தாழ மூன்று இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இந்தப் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றாக உள்ளது. இந்திய அரசின் மத்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பை கவனிக்கிறது. மூலிகைகள் தொடர்பான மருத்துவ முறையாகும். 5.5 ஆண்டுப் படிப்பில் ஓராண்டு பயிற்சி காலமாகும்.



பி.யு.எம்.எஸ் (Bachelor of unani medicine):

எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைக்காதோருக்கு மாற்று மருத்துவப் படிப்பாக பி.யு.எம்.எஸ் எனப்படும் யுனானி மருத்துவப் படிப்பு உள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளை இந்திய அரசின் மத்திய மருத்துவக்குழு கவனிக்கிறது.

வழக்கமான 10 ஆம் வகுப்பு, +2 கல்வித் தகுதி, டழ்ங் - பண்ல் எனப்படும் படிப்பை (ஓராண்டு) முடித்திருக்க வேண்டும். உருது நுழைவுத் தேர்விலும், இந்தியில் 8ஆம் வகுப்பிற்குறிய சான்றிதழ் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்குரியக் கால அளவு 5.5 ஆண்டுகளாகும்.



பி.என்.ஒய்.எஸ் (Bachelor of Naturopathy and yoga science):

பி.என்.ஒய்.எஸ் எனப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் படிப்புக்கு கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45 ஆயிரம் முதல் அமையும். நிறுவனங்களுக்கு ஏற்பக் கட்டண விகிதங்களும் மாறுபடும். இப்படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும்.



பி.வி.எஸ்சி & எ.எச் (Bachelor of veterinary science & animal Husbandry):

பி.வி.எஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப் படிப்பு 5 ஆண்டுகளில் நிறைவடையும். நிறுவனத்தின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும். மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக பி.வி.எஸ்சி & எ.எச் உள்ளது. இந்திய கால்நடை மருத்துவக் குழு இப்படிப்பை கண்காணிக்கிறது. கால்நடைகளின் உயிர்க்கூறுகள் குறித்துப் படிப்பது இக்கல்வியாகும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 30-80 இடங்கள் உள்ளன. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணி புரியலாம்.

நவீன உலகில் மனஅழுத்தம் அதிகமாகி வருவதும் வாழ்க்கை மாற்றமும் இப்படிப்பிற்கான தேவையை அதிகரித்துள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, உணவு நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை இப்படிப்பாகும். இதன் 5.5 ஆண்டு படிப்பில் ஓராண்டு பயிற்சிக் காலமாகும். பட்டயம், இளநிலை, முதுநிலை படிப்புகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பு இயற்கை உணவுமுறை குறித்து குறிப்பிடுகிறது. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு மருத்துவமனைகள் பணிபுரியலாம். வேறு சில நிறுவனங்களிலும் பணியாற்றலாம். இந்தியாவில் 10 கல்லூரிகள் இயற்கை மருத்துவம் கற்றுத் தருவதற்கு உள்ளன.

இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே கல்வித்தகுதி: 10, +2 படித்திருக்க வேண்டும். +2 படிப்பில் அறிவியல் பிரிவுப் பாடம் படித்திருக்க வேண்டும். உயிரியல், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சித்த மருத்துவ பயிற்சி


திருத்துறைப்பூண்டி : தமிழ் மாநில சித்த மருத்துவ கழக மாதாந்திர பயிற்சி வகுப்புகள் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தேவூர் மணிவாசகம், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். மேட்டுபாளையம் வைத்தியர் அன்பழகன் வரவேற்றார். குழந்தைகளுக்கு 20 விதமான அறிகுறிகளுடன் காணப்படும் ஆட்டிசம் மூளை, நரம்பு, செல் பாதிப்புகளுக்கு வசம்பு, துளசி, குப்பைமேனி, வல்லாரை, சிறுசெருப்படை போன்ற மூலிகைகள் குணமாகும் என்று பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  வைத்தியர்கள் திருவாரூர் புகழேந்தி, வாய்மேடு வெங்கடாசலம், மன்னார்குடி மணிமாறன், வெளிப்பாளையம் பாலசுப்பிரமணியன், மணக்காடு பாலசுப்பிரமணியன், நீலப்பாடி இங்கர்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் வேட்புமனு அளித்தனர்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆடலரசன் மட்டும் திங்கள்கிழமை பேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

புதன்கிழமை தே.மு.தி.க, மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் க.உலகநாதன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் அளித்தார்.

இவரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.பழனிச்சாமி, த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கணேசதேவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் ஐ.வி.நாகராஜன், ம.தி.மு.க. நகர செயலர் கோவி.சேகர் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலர்கள் குடவாசல் தினகரன் (தமிழ்மாநில காங்கிரஸ்) பாலாஜி (தே.மு.தி.க) வி.த.செல்வன் (விடுதலைச்சிறுத்தைகள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவருக்கு இருசக்கர வாகனங்கள், ஸ்கார்பியோ கார் மற்றும் ஓட்டு வீடு உள்ளிட்ட ரூ. 18 லட்சம், அவரது மனைவி சுசீலாவுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடன்இல்லை.

பா.ஜ.க. சார்பில் கோட்டூர் அருகே உள்ள சின்னகுருவாடியைச் சேர்ந்த கோ.உதயகுமார் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இவர் மாவட்ட செயலர் இளசுமணி, மாவட்ட அமைப்புச் செயலர் ராகவன், வழக்குரைஞர் அணி நிர்வாகி ராஜவேலு, மாவட்ட பொதுச் செயலர் டி.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செ.ச.சரவணகுமார் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவரை அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் முன் மொழிந்தனர்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அறுவடைக்குக் காத்திருக்கும் "சேலம் சன்னா': இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய பட்டதாரி இளைஞர்

பட்டதாரி இளைஞரின் இயற்கை விவசாயத்தில் முதல் முயற்சியாக பாரம்பரிய நெல் ரகமான "சேலம் சன்னா' தற்போது கதிர் முற்றி அறுவடைக்காகக் காத்திருக்கிறது.
 தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட குட்டூரைச் சேர்ந்தவர் அரங்கு. திருமாவளவன் (25). மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் Dip (ECE)பட்டயம் பெற்று, இளங்கலை ஆங்கில இலக்கியம் BA(ENG) முடித்தவர்.
 சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட இளைஞரான இவர், தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான "சேலம் சன்னா'வை கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் விதைத்தார். தருமபுரி மாவட்டத்துக்கு "சேலம் சன்னா' புதியது.
 இப்போது சிறப்பாக கதிர் முற்றி அறுவடைக்காகக் காத்திருக்கிறது "சேலம் சன்னா'. ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்த திருமாவளவன், சாகுபடிக்கு நடுவே இயற்கைப் பூச்சி விரட்டியையும்கூடப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடும்படியான விஷயம்.
 அடுத்த வாரத்தில் அறுவடை செய்ய இருப்பதாகக் கூறும் திருமாவளவன் தற்போது தருமபுரியில் பாரம்பரிய அரிசி, சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறிய கடையையும் திறந்திருக்கிறார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியது:
 மறைந்த எனது தந்தை தமிழாசிரியர் அரங்கநாதன்தான் எனது விவசாய ஆர்வத்துக்குக் காரணம். எங்கள் குடும்பத்துக்கு இங்கே இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. முதல் முயற்சியாக "சேலம் சன்னா'வை அரை ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்து முடித்திருக்கிறேன்.
 திருச்சியைச் சேர்ந்த சம்பத் என்பவர்தான் விதை நெல்லைத் தந்தவர். இயற்கை விவசாய முறைப்படியே சாகுபடி செய்வீர்களா? எனப் பல முறை உறுதி செய்த பிறகே 5 கிலோ விதை நெல்லைக் கொடுத்தார்.
 தனது நிலத்தில் 100 நாள்கள் பயிராக அதை விளைவித்தவர் அவர். எனக்கு தற்போது ஏறத்தாழ 120 நாள்களைக் கடந்திருக்கிறது. கழனியைத் தயார் செய்வதற்காக எருக்கு, ஆத்தஅரளி போன்ற பால் வரும் செடிகளைப் போட்டு தழையுரமாக மிதித்ததுடன் சரி.
 நாற்றுவிட்டு, பயிர் விட்டதும் நட்டு முடித்தோம். தண்ணீர் விடுதலிலும் வழக்கத்தைவிட சிறப்பாக எதுவும் செய்யவில்லை. எங்கள் நிலத்தைச் சுற்றிலும் உள்ள நிலத்தில், ரசாயனப் பூச்சிகொல்லி மருந்துகளை வாரி இறைத்தபோது லேசான அச்சம் எழுந்தது.
 பூச்சிகளெல்லாம் நமது நிலத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? என அச்சப்பட்டு, இயற்கை முறைப்படி சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை ஊற வைத்து பூச்சி விரட்டி தயார் செய்யவும் முற்பட்டேன். அதற்குள் பயிர் முற்றியது. என்ன ஆனாலும் பரவாயில்லை என விட்டு விட்டேன்.
 எந்தப் பாதிப்பும் இன்றி "சேலம் சன்னா' நன்றாக விளைந்து தலை சாய்த்திருக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் தேவைக்கேற்ப விளைச்சல் இல்லாததால் மட்டுமே விலை அதிகமாக விற்கப்படுகிறது. எனது முயற்சி சிறிதேனும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்' என்கிறார் அரங்கு. திருமாவளவன் நம்பிக்கையுடன்!

காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே காவிரி உரிமையைப் பெற முடியும் :கருணாநிதி

Image result for kalaignarகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே கர்நாடகத்திடமிருந்து காவிரி உரிமையைப் பெற முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

திருவாரூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற  திமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர்  கருணாநிதி திருவாரூருக்கு இனி செய்ய ஒன்றும் இல்லையென்ற அளவுக்கு அனைத்தையும் செய்து விட்டார்.

2016, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக அதிமுகவால் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடியவில்லை. அதனால் தான் இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடாமல் உள்ளது.

காவிரிப் பிரச்னைக்கு இறுதித் தீர்ப்பு பெற்றுக் கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இறுதித் தீர்ப்பை மட்டுமே வைத்து காவிரியில் கர்நாடகத்திடமிருந்து நீரைப் பெற்றுவிட முடியாது. அந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டு, பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்தால் மட்டுமே கர்நாடகத்திடமிருந்து காவிரி உரிமையைப் பெற முடியும்.

இல்லையெனில், மத்திய அரசுக்குக்கூட  கர்நாடகத்தை தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க கட்டாயப்படுத்த முடியாது. காவிரி இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது ஜெயலலிதா தான். அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம்,  ஒழுங்காற்றுக்குழு அமைக்கவில்லையே. எனவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியால் மட்டுமே முடியும் என்றார் துரைமுருகன்.

கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  ரஜினிசின்னா, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு  அமைப்பாளர் தாஜூதீன், பகுத்தறிவு கலை இலக்கிய அமைப்பாளர் கருணாநிதி, நகரச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

திமுக வேட்பாளர் ப. ஆடலரசன் :வேட்புமனு தாக்கல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ப. ஆடலரசன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியின் திமுக வேட்பாளராக முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ப. ஆடலரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. பிரேம்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்து, வேட்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். மாற்று வேட்பாளராக வழக்குரைஞர் ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திர விவரம்:

அசையும் சொத்து: ரூ. 1.50 லட்சம் கையிருப்பு. இருசக்கர வாகனம் ரூ. 30,000, பொலிரோ கார் ரூ. 8 லட்சம், (80 கிராம் தங்கம்) ரூ. 1.60 லட்சம் என மொத்தம் ரூ. 11.50 லட்சம் உள்ளது.

அசையா சொத்து: 12.59 ஏர்ஸ் நிலத்தின் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். கடன் விவரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. அப்போது, கட்சியின் திருவாரூர் மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் கோ. தருமராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, முத்துப்பேட்டை ஒன்றியச் செயலர் இரா. மனோகரன், நகர காங்கிரஸ் தலைவர் ப. எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதில் நாகை மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், நகர திமுக செயலர் ஆர்.எஸ். பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் முகில. ராஜேந்திரன், வி.எஸ்.ஆர். தேவதாஸ், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் தாஹிர், வட்டார

காங்கிரஸ் செயலர் சங்கு. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விட்டுக்கட்டி நபருக்கு கத்திக்குத்து கார் டிரைவருக்கு வலைவீச்சு

திருத்துறைப்பூண்டி அருகே விவசாயியை கத்தியால் குத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயிக்கு கத்திக்குத்து

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டி யாதவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது27). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர்கள் ராமமூர்த்தி (27), முருகவேல் (25). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் காரைக்கால் சென்றுவிட்டு அங்கிருந்து விட்டுக்கட்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் 3 பேரும் வேலூர் பாலம் அருகே உள்ள கார் டிரைவரான கண்ணன் என்பவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனை கண்ணன் தட்டிக்கேட்டார்.

இதில் கண்ணனுக்கும், அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், ஆனந்தராஜை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற ராமமூர்த்தி, முருகவேல் ஆகியோரையும் அவர் கத்தியால் குத்த முயன்றார். பின்னர் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

டிரைவருக்கு வலைவீச்சு

இதில் படுகாயமடைந்த ஆனந்தராஜ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆனந்தராஜ், திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோடை டிப்ஸ்...

கோடைக் காலத்தில் சாப்பிட வேண்டியவை, சாப்பிடக் கூடாதவை:
Image result for கோடைக் காலத்தில்
  கோடைக் காலத்தில்  சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  பழங்களில்: பப்பாளி, மாம்பழம், கிர்ணிப் பழம், தர்பூசணி, போன்றவற்றை உட்கொள்ளலாம். பெரி வகையை சார்ந்த பழங்களில்:  ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்பெரி ஆப்பிள், செர்ரி போன்றவை உட்கொள்ளலாம்.

  காய்கறிகளில்: பாகற்காய், கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்துவிட்டு லெமன் ஜூஸ், இளநீர், நீர்த்த மோர்,ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள். மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

  வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

நம்மை பாதுகாக்கும் கற்றாழை:

 உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.

  வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.
  •  கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
  •  சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
  •  கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
  •  கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸôகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருத்துறைப்பூண்டி டிரைவர் ராஜாராம் ஓட்டி வந்த பஸ் மின் கம்பத்தின் மீது மோதல் : 3 பேர் பலி

மயிலாடுதுறை அருகே மின்கம்பத்தின் மீது தனியார் பஸ் மோதியதில் 2 பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பஸ்

சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 32 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை நோக்கி வந்தது. திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டிரைவர் ராஜாராம் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வழுவூரை அடுத்த நெய்க்குப்பை என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் பஸ் வேகமாக திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

3 பேர் பலி

விபத்தில் படுகாயம் அடைந்த மன்னார்குடியை சேர்ந்த விஜய் ஆண்டனியின் மகள்கள் ஜான்சிமீனா (வயது 4), 3 மாத குழந்தை சாதனாசுபஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து (36) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வினோத் என்பவரது இடதுகால் துண்டானது. மேலும் படுகாயம் அடைந்த 29 பேரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜயா (45), பாலகுமார் (39), வினோதா (30), குமரன் (50), ஐஸ்வர்யா (25), சென்னையை சேர்ந்த பல்லவி (26), மன்னார்குடியை சேர்ந்த விவேகானந்தன் (37), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வினோத் (26) ஆகிய 8 பேரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடு துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1,267 வாக்குச்சாவடி

திருவாரூர் மாவட்டத்தில் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என்று கலெக்டர் மதிவாணன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருவாரூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமில் வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் மதிவாணன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1,152 வாக்குச்சாவடிகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் 1,200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1,378 வாக்குச்சாவடி அலுவலர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1,582 வாக்குச்சாவடி அலுவலர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1,359 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1,267 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்களிக்க வசதியாக படிவம் 12 அந்தந்த தேர்தல் நடத்தும் அலுலர்களால் வழங்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி(திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு(தேசிய நெடுஞ்சாலை) மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைப்போல நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் குடவாசலை அடுத்த மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. முகாமில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பல்வேறு தேர்தல் பணிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். வீடியோ மூலம் தேர்தல் பணிகள் குறித்து முழு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் விஜயலட்சுமி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா, தாசில்தார்கள் தங்கமணி, கண்ணன், ராஜகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 23 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்ற 9 பேர் கைது

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி மற்றும் ஆலிவலம் காவல் சரகங்களில் எஸ்.பி ஜெயசந்திரன் நேரடி மேற்பார்வையில் ஏடிஎஸ்பி அப்துல்லா, டிஎஸ்பி கண்ணதாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன் தினம் இரவு  சோதனை நடத்தினர். இதில் சாராயம் விற்ற மீனாட்சி வாய்க்கால் காந்திமதி (58), கொக்கலாடி ரேவதி (48), பள்ளங்கோயில் சுப்ரமணியன் (45), செல்வராஜ் (48), பிச்சன்கோட்டகம் பாலசுப்ரமணியன் (48), வேலூர் ராஜேந்திரன் (43), குரும்பல் ராஜா (31)  உள்ளிட்ட 9 பேரை கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி சிவா 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்.

அனுமதி இல்லாமல் தடுப்பூசி போட்டது தொடர்பான வழக்கில் - வாலிபர் கைது

அனுமதி இல்லாமல் தடுப்பூசி போட்டது தொடர்பான வழக்கில் போலீஸ் தேடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது32). ஓமியோபதி டாக்டர். இவருக்கு சொந்தமான மருத்துவமனை கோட்டூர் கடைவீதியில் உள்ளது. இங்கு மஞ்சள்காமாலை, காசநோய் தடுப்பூசிகள் குறைந்த செலவில் போடப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமாரின் மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் தனியார் தொண்டு நிறுவனம் பெயரில் மருத்துவ முகாம் நடத்தி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டது தெரியவந்தது. இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி மகேஷ்குமார், கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஓமியோபதி டாக்டர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் வெங்கடேஸ்வரன்(28) என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

பட்டதாரி வாலிபர்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கோட்டூர்-மன்னார்குடி சாலையில் திருப்பத்தூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த வெங்கடேஸ்வரனை கோட்டூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எம்.ஏ.,பி.எட் படித்த வெங்கடேஸ்வரன், தொண்டு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் மருத்துவ முகாம் நடத்தி மஞ்சள்காமாலை, காசநோய்களுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி கிராம மக்களை ஏமாற்றி பணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும் கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் மருத்துவ முகாம் நடத்தி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தனியார் மற்றும் அரசு வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் - தேர்தல் சிறப்பு பார்வையாளர்

தனியார் மற்றும் அரசு வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு தேர்தல் சிறப்பு பார்வையாளர் கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் முன்னிலை வகித்தார். மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகரித்தால், அதற்கு காரணம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 மாத விற்பனை விவரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடந்த மாதத்தை விட விற்பனை அதிகமாகாமல் நெறிப்படுத்த வேண்டும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கப்படுகிறதா எனவும், தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் அன்றாட பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பறக்கும் படை குழுக்கள்

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள் குறித்தும், இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்தும் மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு இதுவரை பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சாக்கடையில் பெண் குழந்தை பிணம் நாய்கள் கடித்து குதறிய கொடூரம்

திருத்துறைப்பூண்டி அருகே சாக்கடையில் பிணமாக கிடந்த பெண் குழந்தையின் தலையை நாய்கள் கடித்து குதறின.

சாக்கடையில் குழந்தை பிணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் நேற்று பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் பிணம் தலை இல்லாமல் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் நபி என்பவர் பார்த்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடையில் வீசப்பட்ட இந்த குழந்தையின் தலையை நாய்கள் கடித்து குதறி உள்ளன.

விசாரணை

சாக்கடையில் பிணமாக கிடந்த குழந்தை எப்போது பிறந்தது? குழந்தையை கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றார்களா? அல்லது இந்த குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் கொலை செய்து உடலை சாக்கடையில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனை பதிவேட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

மாப்பிள்ளை சம்பா'வின் மகத்துவம் கூறுகிறார் பட்டதாரி இளைஞர்

பாரம்பரியம் மிக்க "மாப்பிள்ளை சம்பா' நெல் ரகத்தை காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயிர் செய்து வருகிறார்.
 இந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன.
 தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவையும் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன.
 இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான எழிலன், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
 அதன் ஒரு கட்டமாக, "மாப்பிள்ளை சம்பா' நெல் ரகத்தை காஞ்சிபுரத்தை அடுத்த தாமல், கீழ் அம்பி பகுதிகளில் உள்ள தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
 இந்த நெல்லை வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் சாகுபடி செய்கிறார்.
 விவசாயத்தை மீட்பதும், இயற்கை விவசாயத்தில் விவசாயிகளை ஈடுபடுத்துவதும் தான் தனது நோக்கம் என்கிறார் எழிலன்.
 இந்த நெல்லுக்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வந்தது குறித்து இவர் கூறும் தகவல் மிகவும் சுவராஸ்யமானது.
 பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர்.
 இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.
 இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. இந்த அரிசியை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் என்றும், அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும் என்றும் வேளாண் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து, காஞ்சி எழிலன் கூறியதாவது:
 தற்போது, காஞ்சிபுரம் பகுதியில் மாப்பிள்ளை சம்பா நெல்லை பயிரிட்டுள்ளேன். பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்குப் பதிலாக மீன் அமிலக் கரைசல், பூச்சி விரட்டிக் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன்.
 இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல்லை பயிரிட்டால் தான் அதற்கான பலன்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
 இதுபோன்ற இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடுவதில் விவசாயிகள் பலரை ஈடுபடுத்த உள்ளேன்.
 அவர்களுக்கு இந்த வகை அரிசியையும், காய்கறிகளையும் விற்பனை செய்வதில் சிக்கல் இருக்கும். அதற்காக காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கடையையும், சென்னையில் 10 கடைகளையும் அமைக்க உள்ளோம். இதற்காக, இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளோம்.
 எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தில் விளைந்த அரிசி, காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.
 இயற்கை விவசாயத்தில் பயிரிடும்போது நம் நிலத்திலேயே அதற்குத் தேவையான பூச்சி விரட்டிச் செடிகள், சத்துகளை அளிக்கும் மூங்கில், பயிர் ஊக்கிகளுக்குத் தேவையான தழைகள் ஆகியவற்றை வரப்போரத்தில் வளர்த்துக் கொள்ளலாம்.
 இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பொருள்கள் வெளியில் கிடைத்தாலும் அவற்றை வாங்கி பயிரிடும்போது செலவு அதிகமாகும். அதற்குத் தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்து உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும்.
 விவசாயத்துக்குத் தேவையான அனைத்தையும் நம் நிலத்தில் இருந்தே எடுக்க வேண்டும். ஆட்களுக்கான கூலி தவிர வேறு எதுவும் வெளியில் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் இயற்கை விவசாயத்திலும் லாபம் பார்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் எழிலன்.

புதன், 20 ஏப்ரல், 2016

அதிமுக வேட்பாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு ஜாக்கெட் பிட், துண்டு வழங்கியதாக அதிமுக வேட்பாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி வண்ணமுடையப்பர் ஐயனார் கோயிலில் கடந்த 17ம் தேதி அதிமுக சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை. மேலும் கூட்டத்தில் மாற்று கட்சியிலிருந்து வந்த பெண்களுக்கு ஜாக்கெட் பிட்டும், ஆண்களுக்கு துண்டும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி, தொகுதி பொறுப்பாளர் வக்கீல் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, மாவட்ட துணை செயலாளர் பாலதண்டாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சீராளன், ஊராட்சி செயலாளர் அருண்மொழி ஆகிய 7 பேர் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழ்ச்செல்வன் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வேட்பாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம்

குறைந்த எடையுடன் கைகால் அசைவின்றி ஊனத்துடன் பிறந்தவர் காமராஜ். தந்தையிடம் அடம்பிடித்து பள்ளிக்கு சென்றவர். எங்கே செல்வதாக இருந்தாலும் அவரை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும். தந்தை தான் பள்ளி வாழ்க்கை முழுவதும் அவரை தூக்கித் திரிந்தார்.

10-ம் வகுப்பில் 403 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1007 மதிப்பெண்களும் எடுத்தார்.

பல எதிர்ப்பபுகளுக்கு மத்தியில் கல்லூரியில் சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் எம்.காம் முடித்துவிட்டார். சி.ஏ., படிக்க வேண்டுமென்பது அவர் கனவு. இதற்கிடையில் நமக்கு நண்பர்கள் உதவியது போல் நாம் ஏன் பிறருக்கு உதவ கூடாது என்ற தொண்டு எண்ணம் அவருக்குள் அரும்பியிருக்கிறது. உடனே நாட்டுநலப்பணி திட்டத்தில் சேர்ந்து 10 நாள் முகாமிற்கு சென்று அங்கு மதுவின் தீமைகளைப் பற்றி பேசி பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார். தன்னுள் பேச்சுத்திறமை இருப்பதை உணர்ந்து கொண்டு, பேச்சாளராகி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பல பரிசுகளையும் வாங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் சிஏ படித்து விட வேண்டுமென்ற அவரின் இலட்சியத்திற்கு பெரிய இடி. குளியல் அறையில் உட்கார்ந்து இருக்கும் போது தடுமாறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து போய் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகியும் போச்சாம். செயற்கை எலும்பு வைக்க பல இலட்சம் ஆகும் என்றனர் மருத்துவர்கள். வசதியில்லை இருப்பினும் மனந்தளராமல் செயற்றை மூட்டு மாற்றினார். சி.ஏ முடித்தார். பல பேருக்கு உதவும் வாழ்க்கை வாழ்வேன் என நம்பிக்கையுடன் பேசினார்.

அடிப்பட்டு, எலும்பில் சீல்பிடித்து மருத்துவம் செய்து கொள்ள முடியாத நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம். இதை நினைக்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது அல்லவா...

வாழ போராடும் அவர்களின் முன்பு நம் நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போதெல்லாம் மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வியடைந்தாலே வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சியை கையாளுகின்றனர். வாழ்க்கையில் எவ்வளவு அடிப்பட்டாலும் நாம் எடுத்துக்கொண்ட கொள்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் உதித்தால் போதும்....வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து விடலாம்.

திருத்துறைப்பூண்டி : விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்; சீமான் பேச்சு

திருத்துறைப்பூண்டி,

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் என சீமான் கூறினார்.

அறிமுக கூட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணகுமார் அறிமுக கூட்டம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இங்கே போட்டியிடுபவர்கள் வேட்பாளர்கள் அல்ல, தலைவர்கள் அல்ல, உங்கள் வீட்டு பிள்ளைகள். அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டியில் வீட்டின் உள்ளே புகுந்து பணம் திருட்டு போலீஸ் விசாரணை

திருத்துறைப்பூண்டி–மன்னை சாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி கல்பனா(வயது27). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது மர்மநபர் யாரோ வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடி விட்டு தப்பி முயன்றார். அப்போது சத்தம் கேட்டு கல்பனா திடீரென மர்மநபரை பிடித்தார். உடனே மர்மநபர், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கல்பனா திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் வீரபரஞ்ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளங்களில் ஆழம் தெரியாமல் யாரும் இறங்காதீர்கள் !!! -காவல்துறை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களில் ஆழம் தெரியாமல் யாரும் இறங்காதீர்கள் என்று மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில், விளமல் பதஞ்சலி மனோகர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், திருக்கொள்ளிக்காடு பொங்குசனீசுவரர் கோயில் மற்றும் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே ஆயிரக்கணக்கான குளங்கள் உள்ளன.

கோடைகாலம் என்பதால் சில குளங்களில் நீர் அதிகமாவும், குறைவாகவும் இருக்கும். பல குளங்களில் நீர் வற்றியிருக்கும்.

வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் நீர் உள்ள குளங்களில் இறங்கும்போது பாதுகாப்பாக இறங்க வேண்டும். ஆழம் தெரியாமல் யாரும் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

காவல்துறை இயக்குநர் அசோக்குமார் பரிந்துரையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களிலும் எச்சரிக்கை விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படை மூலம் இதுவரை ரூ. 1.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - கலெக்.எம். மதிவாணன்

திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மூலம் இதுவரை ரூ. 1.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2016 பேரவைத் தேர்தலில் தேர்தல் செலவினத்தை கண்காணிப்பது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் தொகுதிக்கு 3 குழுக்கள் என திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 12 பறக்கும் படை குழுக்கள், 12 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 4-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 கோடியே 96 லட்சத்து 60 ஆயிரத்து 797 கைப்பற்றப்பட்டு, அதன்பிறகு உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 967 விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரொக்கம் அல்லாத பிற இனங்களைக் கைப்பற்றுகை செய்த வகையில் மொத்தம் 4 இனங்களில் 3 இனங்கள் உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வழக்காக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேரவைத் தொகுதிக்கு ஒருகுழு வீதம் 4 தொகுதிக்கும், 4 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், 4 விடியோ உற்று நோக்கு குழுக்களும், 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்தல் செலவீனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் செய்தித்தாள் விளம்பரங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பட்டு வருகின்றன.

இதுவரை இணையதளம் மூலம் 92 புகார்கள் வரப்பெற்று 91 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மூலம் 28 புகார்கள் வரப்பெற்று அனைத்து புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சருமத்தை அழகாக்கும் கற்றாழை

கோடையில் கொளுத்தும் வெயிலால் தோல் பெரிதும் பாதிக்கும். தோலில் கருமை நிறம் ஏற்படும். குறிப்பாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை  சமாளிப்பதற்கான மருத்துவம் குறித்து பார்ப்போம்.அதிக வெயிலால் தோலில் ஏற்படும் எரிச்சல், சிவப்பு தன்மை, கொப்பளங்கள், வியர்குரு ஆகியவற்றை போக்கும் முறையை பார்க்கலாம். பருத்தி துணியை குளிர்ந்த நீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும்.

தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு செய்துவர எரிச்சல் அடங்கி தோல் பழைய நிலைக்கு திரும்பும்.வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும். எரிச்சல், வியர்வை போன்றவற்றால் உடலில் அரிப்பு ஏற்படும். எனவே, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். சோற்று கற்றாழையை பயன்படுத்தி தோலை பாதுகாக்கும் மருந்து தயாரிக்கலாம்.

சோற்று கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சதையை எடுக்கவும். இதை தோலில் தடவினால் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். வியர்குருவை போக்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சோற்றுக் கற்றாழை சருமத்துக்கு அழகு, ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி, உஷ்ணத்தால் தோலில் ஏற்படும் பாதிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்து, அரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும். தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் இதை தடவவும். இதனால் தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள் கொண்ட உருளை கிழங்கு புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது. மேல்பூச்சாக போடும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. டீ தூளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். டீ தூளில் நீர்விட்டு நன்றாக காய்ச்சவும்.

இதை வடிகட்டி எடுத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர், ஒரு மெல்லிய துணியில் நனைத்து தோலில் தடவினால் தோலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். காலை, மாலை இவ்வாறு செய்துவர சிவப்புதன்மை மறையும். உற்சாக பானமாக விளங்கும் டீ, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாறு புண்களை விரைவில் ஆற்றும். எலுமிச்சை, டீ தூள் ஆகியவை தோலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.

மாங்காய் : கோடை கால நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை நிலையாக வைத்துக் கொள்வதற்காக வியர்வையாக வெளியாகிறது. அதே நேரம் இந்த வியர்வையின் காரணமாக உடலில் வியர்க்குரு போன்ற தொல்லைகளும் ஏற்படுகின்றன. நமது அன்றாட சமையலில் பயன்படும் பாசி பயறை பயன்படுத்தி வியர்குருவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் பாசிப்பயறு மாவு, வெள்ளரி சாறு.

வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு அதை சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், சுமார் 3 அல்லது 4 ஸ்பூன் வெள்ளரி சாறை சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களுமே உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடிய ஒன்றாகும். இவ்வாறு கலந்த கலவையை உடலில் வியர்க்குரு தாக்கம் உள்ள இடங்களில் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். சுமார் கால் மணி நேரத்திற்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குருவால் ஏற்படும் நமைச்சல், எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

அதே போல் வியர்க்குரு, கொப்புளங்களை சமாளிக்க வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் வேப்பிலை, மஞ்சள் பொடி. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் மஞ்சள் பொடியை தேவையான அளவு எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வியர்க்குரு, கொப்புளங்கள் உள்ள இடங்களில் நன்றாக மேற்பூச்சாக பூசி வர, கொப்புளங்கள் ஆறும். வியர்க்குருவின் தாக்கம் தணியும். குளிப்பதற்கு முன்னதாக இதை நாம் 15 நிமிடங்களுக்கு முன்பு பூசி விட்டு பின்னர் குளிக்கலாம்.

இதை காலை மாலை இரு வேளைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் முல்தானி மட்டியை பயன்படுத்தியும் வியர்க்குரு தொடர்பான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.  முல்தானி மட்டி நாட்டு மருந்து கடைகளில் இயல்பாக கிடைக்கும். இந்த முல்தானி மட்டி பொடியையும், வெள்ளரி சாறில் கலந்து பூசிக் கொண்டு பின்னர் குளித்து வர வியர்க்குரு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மேலும் தோலும் பொலிவு பெறும்.கோடையில் ஏற்படும் வியர்க்குருவை சமாளிக்க உள்மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் மாங்காய் துண்டுகள், வேப்பம்பூ, உப்பு, பனங்கற்கண்டு. மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு வேப்பம் பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாங்காய் நன்றாக வேகும் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி விட்டு நன்றாக வெந்த மாங்காய் துண்டுகள்-வேப்பம்பூ கலவையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.

பின்னர் இதை தேவையான அளவு நீரில் கலந்து கொள்ள வேண்டும். மாங்காய் துண்டுகள் கலந்த இந்த நீரை எடுத்துக் கொள்வதன் மூலம்  உடலின் வெப்ப நிலையை சமன்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் கோடை கால பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மாங்காய் புளிப்பு மற்றும் உஷ்ணம் தரக் கூடிய ஒன்றாகும். அதை வேக வைத்து எடுத்துக் கொள்வதன் மூலம் அது உஷ்ணம் தராமல் உதவுகிறது. இவ்வாறு நாம் அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு கோடை கால நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பறக்கும் படையினருக்கு ஆலோசனை

திருத்துறைப்பூண்டியில் வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வாகனம் மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனம் உள்ளிட்ட 6 வாகனங்கள் இரவு பகலாக வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில்  நேற்று முன்தினம் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியை திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலரும்,  முதுநிலை மண்டல மேலாளருமான அழகிரிசாமி ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், தேர்தல் துணை தாசில்தார் சங்கர், உதவியாளர் ராமமூர்த்தி உடனிருந்தனர்.

கயிறு திரிக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

Image result for விர்ச்சு தொண்டு நிறுவனதிருத்துறைப்பூண்டி விர்ச்சு தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் மூலமாக பல்வகை ஊனமுற்றோர் பயனாளிகளான 25 நபர்களுக்கு 4 மாத கால இலவச கயிறு திரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா  நடைபெற்றது.

விர்ச்சு தொண்டு நிறுவன இயக்குனர் சேவியர் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கி கிளை மேளாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்து, 25 பேருக்கும் சான்றிதழ் வழங்கி பேசினார். விழாவில் ராகவேந்திரா மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயக்குனர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்றுனர் வாணி நன்றி கூறினார்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

உலகின் அதிக வயதான நபர் நேதாஜியின் கார் ஓட்டுநர்-கர்னல் நிஜாமுதீன்!

116 வயதில் வங்கிக் கணக்கு தொடங்கிய நேதாஜியின் கார் டிரைவர்உலகிலேயே மிகவும் அதிக வயதான நபர் என்னும் பெருமையை சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் கார் ஓட்டுநருமான கர்னல் நிஜாமுதீன் படைத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸம்கரில் உள்ள முபாரக்பூரில் வசிக்கும் அவர், அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு தொடங்க தனது மனைவி அஜ்புனிஷாவுடன் வந்தார். அப்போது அவர், கடந்த 1900-ஆம் ஆண்டில் தாம் பிறந்ததற்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டையை அளித்தார்.

அதன்படி, அவருக்கு தற்போது 116 வயதும், 3 மாதங்கள் மற்றும் 14 நாள்களும் ஆகின்றன. இதற்கு முன்பு, ஜப்பானைச் சேர்ந்த 114 வயதான நபர் அந்தப் பெருமையை பெற்றார். இந்நிலையில், அவரை விட 2 வயது அதிகம் என்பதால், உலகிலேயே அதிக வயதான நபர் எனும் பெருமையை நிஜாமுதீன் பெற்றுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) உருவாக்கியபோது, அவருடன் இணைந்து நிஜாமுதீன் முக்கியப் பங்காற்றினார். மேலும், நேதாஜியின் கார் ஓட்டுநராகவும் அவர் செயல்பட்டார்.

அவரது மனைவி அஜ்புனிஷாவுக்கு தற்போது 107 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்துறைப்பூண்டியில் முற்றுகை போராட்டம்: திராவிடர் கழகத்தினர் கைது

அனைத்து சாதியினரையும் கோவில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகையன் உள்பட 14 பேரை திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் பெர்ணான்டஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர்

மீண்டும் உலகநாதன் போட்டி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் சட்மன்ற தேர்தலில் போட்டியிடும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களான நல்லகண்ணு மற்றும்
தா.பாண்டியன் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் உடல்நிலை காரணமாக அவர்கள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வர். மேலும் என்னுடன் சேர்த்து மொத்தம் 9 முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவில்லை என முத்தரசன் தெரிவித்தார்.

1. திருவாரூர் - மாசிலாமணி
2. தளி - ராமச்சந்திரன்
3. பவானிசாகர் - சுந்தரம்
4. பென்னாகரம் - நஞ்சப்பன்
5. ஸ்ரீவில்லிபுத்தூர் - லிங்கம்
6. வால்பாறை - மணிபாரதி
7. திருத்துறைப்பூண்டி - உலகநாதன்
8. குடியாத்தம் - லிங்கமுத்து
9. சைதாப்படே்டை - ஏழுமலை
10. அவிநாசி - ஆறுமுகம்
11. சிவகங்கை - குணசேகரன்
12. மாதவரம் - கண்ணன்
13. கீழ்பெண்ணாத்தூர் - ஜோதி
14. அருப்புக்கோட்டை - செந்தில்குமார்
15. பேராவூரணி - தமயந்தி திருஞானம்
16. திருப்பூர் வடக்கு - ரவி என்கிற சுப்பிரமணியம்
17. மதுரை கிழக்கு - காளிதாசன்
18. திருப்பரங்குன்றம் - கந்தசாமி
19. ஒட்டன்சத்திரம் - சந்தானம்
20. ஸ்ரீரங்கம் - புஷ்பம் வைத்தியநாதன்
21. அறந்தாங்கி - லோகநாதன்
22. வாசுதேவநல்லூர் - சமுத்திரக்கனி
23. நாகை ___________
24. வீரபாண்டி - மோகன்
25. திருப்பத்தூர் - சாத்தையா

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

காலையில் எழுந்த உடன் மனஅழுத்தத்தில் இருத்தல், எதையும் செய்ய மனமற்ற நிலை, ஓய்வற்ற நிலை, தற்கொலை எண்ணம், மூட்டுகள் மற்றும் இடுப்புவலி, ஜீரண குழாய்களில் பிரச்னை இவற்றில் 5க்கு மேல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு மன அழுத்த நிவாரண உதவி மிக அவசியம். ஆய்வக பரிசோதனையை விட நோயாளியுடன் உரையாடி கண்டுபிடிப்பதே சிறந்தது.

உடல் ரீதியாக அறிதல்

முகம்பார்த்து பேசாமை, முடியை இழுத்து கொண்டிருத்தல், ஞாபகம் இன்மை, ஈடுபாட்டு தன்மை இன்மை, பேச்சில் குறைவு, மூலையில் ஒதுங்கி இருந்து அழுது தேம்புதல் தற்கொலை எண்ணம் அதிகமன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டும். இப்படிப்பட்ட நோயாளிகளை மிக கவனமாக பராமரிக்கவேண்டும்.

சிகிச்சை

ஆன்டிடிப்ரசன்மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தலாம். செரோட்டின், டோப்பளமின் போன்ற மருந்து இதற்கு உதவுகிறது. ஆனால் பின் விளைவுகளாக செரிமான கோளாறு, தலைவலி, நரம்புதளர்ச்சி, வாந்தி, தூக்கமின்மை தென்படும். சைக்கோ தெரபி கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்திலிருந்து மீட்டு வரலாம். மருந்துவம், கவுன்சிலிங் ஆகியன சேர்ந்து எடுப்பது எளிதில் நிவாரணம் பெறச்செய்யும். இவை முடியாத பட்சத்தில் மின்காந்த அலைகள் தலையில் தொடர்பு ஏற்படுத்தி நரம்புகளை தூண்டியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கை கொடுக்கும் யோகா

தியானம், யோகா, அக்குபஞ்சர், இசை, மசாஜ் மற்றும் நறுமணபொருள், ஊட்டசத்துள்ள உணவுகள் ஆகியன மூலமும் குணப்படுத்தலாம். தியானம் என்றால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக ஒரே ஒளி, ஒலி மந்திர குறிப்பிட்ட ஒரு பிம்பத்தின் மீது மனதை குவிய செய்தல். யோகா, தியானத்துடன் உடலை சில நிலைகளில் அமர செய்து மூச்சுப்பயிற்சியுடன் உடல் எடையை மறந்து ரிலாக்சாக்குதல் மூலம் நல்ல மாற்றம் வருகிறது.

உடலை தடவுதல் 

மசாஜ் மூலம் உடல் பாகங்களை தடவும் முறையால் ரிலாக்ஸ் கிடைக்கும். மானசீகமாக தடவும் போது மனமும் உடலும் தொடர்புக்குள்ளாகிறது.  உடல் சுகம் கிடைக்கிறது. ஆவேசம், தீவிர உணர்ச்சி அழிகிறது.


அக்கு பஞ்சர்

அக்கு பஞ்சர் எனும் நுண்ணிய ஊசிகளை குறிப்பிட்ட இடங்களில் தோலின் உள் செலுத்தி உடல் வலி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் மீன் எண்ணை (ஒமேகா 3), விட்டமின் பி6, பி12, விட்டமின் சி மற்றும் டி ஆகியவை கொண்ட உணவுகளையும், இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசிய சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுக்கலாம்.

செரேட்டோனின் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும். செரேட்டோனின் குடலில் 90 சதவீதமும், மூளை மற்றும் ரத்தத்தில் 10 சதவீதமும் இருக்க வேண்டும். உறக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரேட்டோனின் குறைந்தால் கோபம், தற்கொலை எண்ணம் வரும். சத்துக்கள் இல்லாத உணவு செரோட்டோனின் அளவை குறைக்கும்.ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செரோட்டோனின் அளவை அதிகரிக்க செயத்து ரத்தத்தினை சீராக ஓடச் செய்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. நல்ல சிந்தனை ஓட்டம் மற்றும் அன்பு மலரச் செய்கிறது. பருப்பு, பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணெய், புளித்த உணவுகள் மனஅழுத்தத்தை குறைக்கும்.

இயற்கை வைத்தியம்

தினமும் இரு வேளை 50 கிராம் மஞ்சளுடன் 15 கிராம் குங்குமம் சேர்த்து 8 வாரம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும். ஜிங்கோபைலோபா என்ற மூலிகை மருந்தும் உதவும். ஜடமான்சி, நீர்பிரம்பி, பூசணிக்காய், சங்கு புஷ்பம், வால் உழுவை, அமுக்கார சூரணம் இவைகளை பசு நெய்யில் தனித்தனியாக தயாரித்து சாப்பிட்டால் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னோர் காட்டிய வழியான முறையான உணவுபழக்கம், நன்நெறி கடைபிடித்தல், கட்டுக்கோப்புடன், திறந்த மனதுடன், தூய்மையான சிந்தனையுடன் வாழ்தல் அவசியம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் மர்ம சாவு : தற்கொலை நாடகமாடிய அந்த பெண்ணின் மாமனார் கைது

கூத்தாநல்லூர் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. தற்கொலை நாடகமாடிய அந்த பெண்ணின் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

பெண் மர்ம சாவு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வக்ராநல்லூர் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்தவர் தங்கையன் (வயது61). இவருடைய மகன் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. பூவிழிஸ்ரீ(4) என்ற மகள் உள்ளார். கடந்த 14-ந் தேதி மகாலட்சுமி அவருடைய வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து மகாலட்சுமியின் தம்பி மன்னார்குடி தேவேந்திரபுரத்தை சேர்ந்த இளையராஜா கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தனது அக்கா சாவில் மர்மம் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வழக்கு தொடர்பாக மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி விசாரணை நடத்தினார். இதில் தங்கையன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாலட்சுமியின் சாவு தொடர்பாக இருந்து வந்த மர்மம் விலகி, குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மாமனார் கைது

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ரமேஷ் அனுப்பும் பணத்தை மகாலட்சுமி தனது பெற்றோரிடம் கொடுத்தார். இதனால் மகாலட்சுமிக்கும், அவருடைய மாமனார் தங்கையனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கையன், மகாலட்சுமியை அடித்து கீழே தள்ளினார். இதில் மகாலட்சுமி சுவர் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது கழுத்து நெரிக்கப்பட்டதில் அவர் இறந்து விட்டார். இதைதொடர்ந்து மகாலட்சுமியின் பிணத்தை தூக்கில் தொங்க விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக தங்கையன் நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கை கொலை வழக்கமாக மாற்றம் செய்து, தங்கையனை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதைதொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் தங்கையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு அடுத்தமாதம் 21,22-ந்தேதிகளில் நடக்கிறது

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டிற்காக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 21 மற்றும் 22-ந் தேதி நடக்கிறது.

நுழைவுத்தேர்வு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 412 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தற்போது மாணவர் விடுதிகள், ஆராய்ச்சி மாணவர் விடுதிகள், உயர்தர ஆய்வுக்கூடங்கள், விவாத அரங்கங்கள், நூலகம், கலையரங்கம் போன்ற கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காகன நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது 24 பாட வகுப்புகளுக்கான படிப்புகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டில் புதிதாக 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி பொருளியல், இந்தி மொழி, கணினி அறிவியல், பொருள் தொழில்நுட்பவியல் ஆகிய 4 முதுகலைப்பாடங்களும், பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ், இசை சம்பந்தமான 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.

இதில் முதுகலை பொருளியல் பாடத்தினை மாணவர்கள் முதல் 3 ஆண்டுகள் திருவாரூரிலும், இறுதி 2 ஆண்டுகள் சென்னை பொருளியல் கல்லூரியில் பயில்வார்கள். இதேபோல பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ் பாடப்பிரிவு கோயம்புத்தூர் சர்தார் வல்லபாய்பட்டேல் பன்னாட்டு துணி வகை மற்றும் மேலாண்மை கல்வி நிலையத்தில் 40 மாணவர்களுக்கான சேர்க்கையோடு நடைபெறும்.

ஒப்பந்தங்கள்

முதுகலை தமிழ் பாடத்திற்கு சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடனும், சமூக பணி பாடத்திற்கு மும்பையில் உள்ள டாட்டாவின் அடிப்படை உயர்கல்வி மையத்தோடும், சட்டம் சார்ந்த குறுகிய கால பாடத்திற்கு பெங்களூரு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகத்துடனும், நீர் மேலாண்மை பாடத்திற்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, அரியானா, ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 9 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொது நுழைவுத்தேர்வு நடத்துகிறது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு சலுகைகளுடன் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி வெளியாகும்.

இந்த தகவலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகாயத் தாமரை செடிகளை சேவை மனப்பான்மையுடன் அகற்றி வரும் இளைஞர்கள்

முத்துப்பேட்டை சின்ன ஏரியில் படர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அப்பகுதி இளைஞர்களே அகற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி வரைபடத்தில் 100 குளங்கள் உள்ளன. தனியார் ஆக்கிரமிப்பால்  நீர்நிலைகள் படிப்படியாக குறைந்து, தற்பொழுது பேரூராட்சி பட்டியலில் 44 குளங்கள் மட்டுமே உள்ளது. அதுவும்  தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கி குட்டையாகி மாறி 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான் மக்கள் கண்ணில் தென்படுகின்றன.

இந்நிலையில் தெற்குக்காட்டில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சின்ன ஏரி மிகப்பெரிய பரபரப்பளவு கொண்ட ஒரு நீர் நிலையாகும். தற்பொழுது இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு உள்ளதால், ஒரு சிறிய குளமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் குளிக்கவும், குடிக்கவும் இதை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த சின்ன ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து சாகுபடி செய்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது இந்த சின்ன ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து, ஏரியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மாரிமுத்து, அன்னாசந்திரன், ராஜேஷ், சிவசூரியா, ஹரிஹரசுந்தர், கலையரசன், மணிகண்டன், அஜய், ஹரிஸ், அக்னி, பன்னீர், சிவபாலன், உத்ராபதி ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இறங்கி மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை செடிகளை சேவை மனப்பான்மையுடன் அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த எங்களுக்கு நீராதாரமாக சின்ன ஏரி மட்டுமே உள்ளது. இதில் மட்டும் தான் தண்ணீர் இருக்கிறது. குளத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நாங்களே முன்நின்று  ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி வருகிறோம் என்றார்.

அன்னாசந்திரன் கூறுகையில், இந்த சின்ன ஏரியின் ஒரு புறம் சித்தேரி குளத்திற்கும், மறுபுறம் சேற்றுக்குளத்துக்கும் வழி உள்ளது. தற்போது முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு சாகுபடி நிலமாகவும், பிளாட்டுகளாகவும் மாறிவிட்டது. தமிழக அரசு இந்த சின்ன ஏரி ஆக்கிரமிப்புகைளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்து எங்களுக்கு தர வேண்டும் என்றார்.

கணவரைக் காணவில்லை: மனைவி புகார்

வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கணவரைக் காணவில்லை என பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நெய்விளக்கு தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதிபா(21). கச்சநகரம் கலியபெருமாள் மகன் பழனி(22). இருவரும் திருவாரூர் திருவிக அரசுக் கல்லூரியில் படித்தபோது காதலித்துள்ளனர். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பழனி வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதிபா வீட்டார் சம்மதத்துடன் கடந்த 15.11.2015-இல் திருமணம் நடைபெற்று, பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 19.12.2015 அன்று சென்னைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பழனி இதுவரை ஊர் திரும்பவில்லையாம்.

இதையடுத்து, தனது கணவரைக் கண்டுபிடித்து தரும்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் பிரதிபா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவனின் தாய், சகோதரியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்

நாகையில் பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவனின் தாய், சகோதரியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

கணவன் கைது

நாகை வெளிப்பாளையம் சிவன்தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துர்காதேவி (25). இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணிகண்டன் இரும்பு கம்பியால் துர்காதேவியை தலையில் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரமணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணிகண்டனை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று துர்காதேவியின் உறவினர்கள் இந்த கொலை வழக்கில் வீரமணிகண்டனின் தாய், சகோதரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறியும், அவர்களை உடனே கைது செய்யக்கோரியும் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை 

இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்காதேவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து துர்காதேவியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நம் மொழி தமிழ்

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும்.
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
இந்தியா,
இலங்கை,
 மலேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும்,

 ஐக்கிய அரபு அமீரகம்,
தென்னாப்பிரிக்கா,
மொரிசியசு, பிஜி,
ரீயூனியன்,
டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் 18 பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தில் சாதாரண 
மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ள ஓர் மொழி . எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது.

திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன.

கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச
அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

இயன்றவரை தமிழில் பேசுவோம் .,
இந்த மொழியை  பேணி வளர்ப்போம் ..,


தொகுப்பு

விக்கி பிடியா

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka