செவ்வாய், 22 நவம்பர், 2016

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா பகுதியை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி திருவாரூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் சம்பா பயிர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் தற்கொலை மற்றும் உயிரிழப்புக்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

ஏ.டி.எம். மையத்துக்கு மாலை - நூதன போராட்டம்

முத்துப்பேட்டையில் ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் ஜகபர் அலி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் முகைதீன்பிச்சை வரவேற்றார். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் வங்கி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வங்கி முன்பு நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மாலை அணிவித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நாசர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியினர் மாலையுடன் ஊர்வலமாக சென்று வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அங்கு சென்று மாலையை அகற்றினர்.

வியாழன், 3 நவம்பர், 2016

வெளிமாநில சாராயம் பதுக்கிய வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலகொற்கையில் வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு
தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவத்தன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெளிமாநில சாராயம் பதுக்கி வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேலகொற்கை ஏரி வாய்க்காலை சேர்ந்த முருகையன் மகன் கார்த்திபன் (வயது 23) என்பதும், புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திபனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

வட்டித் தொழில் செய்வோருக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடு படுகிறவர்கள் அரசு விதிமுறையை மீறி வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உரிமம் பெறாமல் வட்டித் தொழில் செய்தல் மற்றும் தமிழ்நாடு வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டம் 1957 பிரிவு 7-ன் படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைவிட கூடுதல் வட்டி வசூல் செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மிகையான வட்டித் தொழில் செய்யும் நோக்கத்துடன் வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது மக்கள் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம்.
அதாவது நாள்வட்டி, கந்துவட்டி, மீட்டர்வட்டி அல்லது தண்டல் மற்றும் மணிக்கணக்கு வட்டித் தொழில் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரித்துள்ளார்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தாய் கொலை: மகன் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி அருகே மகனால் தாக்கப்பட்ட பெண், திருவாரூர்
மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மாவதி (60). இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரது கடைசி மகள் திருமணத்துக்காக தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து, பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். இந்த பணத்தை பத்மாவதியின் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (29) செலவு செய்தாராம்.
இதை பத்மாவதி தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஸ் கடந்த 21-ஆம் தேதி தனது தாய் பத்மாவதியை கோடாரியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பத்மாவதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (செப்.23) இறந்தார். இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, சுபாஷ்சந்திரபோûஸ தேடிவருகின்றனர்.

புதன், 21 செப்டம்பர், 2016

அல்ஸைமர்: ஆண்களும் பெண்களும் - ஒரு பார்வை


எல்லாப் பணிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்குக்கு கணிசமான ஆக்கத்திறன் தேவை. உடல் பயன்படுத்தும் மொத்த
ஆக்ஸிஜனில் 20 சதவிகிதத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது. புத்தம் புதிதாகப் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் மூளையின் எடை அப்போது பிறந்த ஒரு பெண் குழந்தையின் எடையை விட சற்று அதிகமாகவும், அளவிலும் பெரியதாகவும் இருக்குமாம்.

தலையின் சுற்றளவும், பெண் குழந்தையின் தலையின் சுற்றளவைவிட 2 சதவிகிதம் அதிகமாக இருக்கும். பெண் குழந்தையின் மூளையை விட  ஆண் குழந்தையின்  மூளை 12-20 சதவிகிதம் பெரியதாக இருக்கும். அளவில் வித்தியாசம் இருக்கும் நிலையில், ஆணும் பெண்ணும் அவர்களின், மூளைச் செயல்பாட்டில், திறனில் வித்தியாசம் இருக்குமா என்றால், நிச்சயம் இருக்கும் என்பதுதான் பதில்.

மூளையை லத்தீன் மொழியில் ‘செரிபிரம்’ என்பர். மனிதனின் உடல் எடையில் 50-ல் ஒரு பங்கு எடை கொண்டது மூளை. வயது வந்த ஓர் ஆணின் மூளை 1360 கிராமும், பெண்ணின் மூளை 1230 கிராமும் எடை கொண்டது. பொதுவாக, ஆண் மூளை, பெண் மூளையை விட 11-12 சதவிகிதம் அதிக எடை கொண்டது. எல்லாஆண்களுடைய மூளையும் ஒன்று-போலவேதான் இயங்கும். அவர்களுடைய மூளையில் எத்தனையோ விதமான எண்ணங்கள், சிந்தனைகள் தோன்றினாலும், கடைசியில் இரண்டுவிதமான உணர்வுகளில் முடிகிறது. ஒன்று பயம், இன்னொன்று இன்பம். இத்தகைய அமைப்பில்-தான் ஆண் மூளை உள்ளது. ஜாதி, மத, அந்தஸ்து வேறுபாடின்றி அனைத்து ஆண் மூளைகளின் இயக்கமும் இன்பம், பயம் என்ற இந்த இரண்டைச் சார்ந்தே உள்ளது. அதாவது சம்பாதிப்பது, இனச் சேர்க்கை, பணம், பட்டம், பதவி இவற்றை அடைந்து அதில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை நோக்கி இயங்குதல், அடுத்ததாக ஈட்டிய அத்தனை சுகபோகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை நோக்கி இயங்குதல்.

எடையில் பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை பெரியது என்றால், பெண்களைவிட ஆண்கள் புத்திசாலியாக இருப்பார்களோ?

பெண்களின் சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகவே சித்தார்த்துக்குப் பிடிக்கவே இல்லை. வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம். அதுக்குக் காரணம், அன்றுதான் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிருந்தன. பத்தாவது படிக்கும் சித்தார்த், மிகவும் குறைவாக மார்க் வாங்கியிருந்தான். அதே நேரத்தில், அன்றைய தினமே 8-ம் வகுப்பில் படிக்கும் அவனுடைய தங்கை சுமதிக்கும் மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவள்தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண். இதைக்கேட்டதும், சித்தார்த்துக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது.

இவன் நினைத்ததுபோலவே, வீட்டில் அப்பாவும் அம்மாவும் அவனை திட்டித் தீர்த்துவிட்டார்கள். சுமதிக்கு நாங்க சொல்லிக்கொடுக்கறதே இல்லை. அவளே படிச்சு எப்படி மார்க் எடுத்திருக்கா பாரு. நீயும் இருக்கியே. நானும் அம்மாவும் ஆபீஸ்ல இருந்து வந்து உனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்குறோம். ஸ்பெஷல் டியூஷன் வேற போற. அப்படி இருந்தும் இப்படி மார்க் வாங்கியிருக்கியே. நீயெல்லாம் எப்படிப் படிச்சி பாஸ் பண்ணப்போறியோ தெரியல. இந்த லட்சணத்துல, ஸ்டேட் ரேங்க் வாங்கிக் காட்டறேன்னு சவால் வேற என்று அப்பா திட்டுவதைத் தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான் சித்தார்த். இதுபோன்ற சம்பவங்கள் வீட்டுக்கு வீடு நடப்பது உண்டு. ஒவ்வோர் ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால்,

ஆண்களைவிட பெண்களே அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஆண் குழந்தைகள் பொறுப்பின்றி ஊர் சுற்றுவதால், தேர்ச்சி விகிதம் குறைவு என்று கூறினாலும், பெண்கள் அதிக மதிப்பெண் பெற இயற்கையும் அவர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். எப்படி?

மூளையை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று பிரித்திருக்கிறார்கள் எனப் பார்த்தோம். இதில், முன் மூளையை செரிபெரம் கார்டெக்ஸ் என்பார்கள். இப்பகுதியில்தான் பார்ப்பவை, படிப்பவை எல்லாம் நன்கு பதியத் தொடங்குகின்றன. பெண்களுக்கு இந்தப் பகுதி ஆண்களை விடவும் சற்று தடிமனாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுலபமாகச் சொன்னால், தடிமனான காகிதத்தில் எழுதியது, மெல்லிய தாளில் எழுதியதைவிட அழுத்தமாகவும், அதிக நாளும் இருக்கும். அதுபோல், பெண்களின் ஞாபக சக்தியும் ஆண்களைவிட சற்று அதிகமே.

நான் பேச நினைப்பதெல்லாம்...

அதேபோல், வளவளவென்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் அந்த செரிபெரம் கார்டெக்ஸின் அதிகப்படியான தடிமன்தான்  காரணம். ஆண்களால் பெண்களைப்போல் வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்த முடியாதாம். கிட்டத்தட்ட பெண்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதி அளவை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். சரி, ஆண்-பெண் மூளைக்கு இடையே உள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்ப்போமா?


  • ஆண்(கள்) மூளை, பெண்(கள்) மூளையைவிட அளவில் சற்று பெரிதுதான். ஆனாலும், வயது ஏற ஏற பெண் மூளையைவிட சுருங்கிவிடுகிறது.
  • பெண் மூளை, குளுகோஸை அதிக அளவில் எரிப்பதால் உயர் வெப்ப நிலையில் இயங்குகிறது.
  • சிந்திக்கும்போது பெண்களே அதிகளவு மூளைத் திறனை  உபயோகிக்கின்றனர்.
  • மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
  • சாதாரணமாக ஓர் ஆணுக்கு 15 நிமிடத்துக்கு ஒருமுறை பாலுணர்வு தோன்றும். ஆனால், ஒரு பெண்ணுக்கோ ஒரு நாளில் ஒருமுறையோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோதான் தோன்றுமாம்.
  • பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது,மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்- மணிகள் ஒலித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
  • தொந்தரவு தரக்கூடிய சிறு ஒலியைக்கூட, ஆண் குழந்தைகளைவிட பிறந்த பெண் குழந்தைகள்  எளிதில் கண்டுகொள்ளும். அதனால்தான், கணவனின் கடுமையான குறட்டைச் சத்தத்துக்கு இடையிலும் குழந்தையின் சிறு சிணுங்கலைக் கூட ஒரு பெண்ணால் கண்டுகொள்ள முடிகிறது.
  • ஒரு பெண்ணை 20 விநாடிகள் கட்டிப்பிடித்திருந்தாலே, ஆக்ஸிடாஸின் என்ற ரசாயனப் பொருள் அவள் மூளையில் சுரந்த்துவிடும். அதனால், கட்டிக்கொண்டு இருந்தவரின் மீது அந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வந்துவிடுமாம்.
  • பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகப்படுத்துகிறார்கள் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
  • எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான வித்தியாசம் இது. ஆராய்ச்சியாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கும் சமீபத்திய கண்டுபிடிப்பு. அதாவது, ஆணுக்கு மூளையின் முன் பகுதியான செரிபெரம் கார்டெக்ஸில், நியூரான்கள்  எனப்படும் நரம்பு செல்கள் அதிகமாக இருக்கின்றன.
  • ஆனால், பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. சரி, அதனால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். மூளை முழுவதும் கோடிக்கணக்கில் நியூரான்களின் நிறைந்திருக்கின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். நியூரான்களின் உள்பகுதியில் கரு இருக்கும். வால் பகுதியில் ஆக்ஸான் எனப்படும் நரம்பிழைகள் கொத்துக் கொத்தாக இருக்கும். உடல் பகுதியில் இருந்தும் நரம்பிழைகள் கொத்தமல்லிக் கட்டுபோல் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டு


நரம்பிழைகள், அதேபோன்ற இன்னொரு கட்டு நரம்பிழைகள் வழியாகத் தொடர்புகொண்டிருக்கும். இந்த நரம்பிழைகளில் ஏதேனும் பாதிப்போ, குறைபாடோ ஏற்பட்டால், நரம்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும். இதனால், ஞாபக மறதி, நன்கு பரிச்சயமான நபர், இடம், மொழி போன்றவற்றில்கூட தடுமாற்றம் ஏற்படும்.  இது போன்ற பாதிப்புகளில் முதன்மையானது அல்ஸைமர் நோய் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏற்கெனவே, பெண்களின் மூளையில் நியூரான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று பார்த்தோம். இந்த நிலையில், அவர்களுடைய மூளையில் நரம்பிழைகளில் தொடர்பு அறுபடும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால்தான், ஆண்களைவிட பெண்களுக்கு அல்ஸைமர் நோயின்  தாக்கம் அதிகமாக இருக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சத்துணவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 3வது பேரவை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ரவிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மோகன்தாஸ் வரவேற்றார்.  ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் கார்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் குணசேகரன், ராஜகணபதி மற்றும் தமிழ்ச்செல்வி, விஜயா, சுமதி,  சித்ரா ஆகியோர் பேசினர். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணியை முடிக்க  வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கால்நடைகள் அடைவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

சுகாதார சீர்கேடு: செடி, கொடி மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி வளாகம்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் தொட்டி இருக்கும்
வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் 2001ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் நகர பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியிலிருந்து தலைஞாயிறு, வேளூர், நெடும்பலம் போன்ற பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் அதிகாரிகளுக்கு அலுவலக கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி உள்ள வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பகுதி எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று யாருக்கும் தெரியவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுற்று பகுதி மற்றும் வளாகம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு, தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tks
Dina.Karan

புதன், 7 செப்டம்பர், 2016

அயனாவரம்_பிளாட்பாரம்_டு_லண்டன்.!

இதோ... இந்த நடை பாதையிலதான் நாங்க படுத்திருப்போம். மழை வந்தா, ஏதாவது கடைக்குக் கீழே ஒண்டிக்குவோம். திடீர்னு போலீஸ்காரங்க வந்து அடிச்சுத் துரத்துவாங்க. அப்பா, பெரும்போதைக்காரர்; என்னோட சின்ன வயசுலேயே செத்துட்டார். அப்பா இறந்த பிறகு, அம்மாவும் போதைக்கு அடிமையாகிட்டாங்க. சிக்னலுக்கு சிக்னல் நின்னு `அம்மா... அய்யா..!'னு கையேந்தி வாங்கியாற காசுல எங்களுக்குச் சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ, அம்மாவுக்கு சரக்கு வேணும். ஒரே ஒரு சொக்கா தான். அதுலயும் ஏகப்பட்ட தையல். பிறந்ததுல இருந்து முடியே வெட்டினது இல்லை. `இப்படி எல்லாம் இருந்தாத்தாண்டா இரக்கப்பட்டு காசு தருவாங்க'னு அம்மா சொல்லும். இந்த வாழ்க்கையில இருந்து மீண்டு, வெளியில வருவேன்னு நினைச்சுக்கூடப்பார்க்கலை'' - கண்களில் நீர் ததும்பப் பேசுகிறார் ஜெயவேல்.
50 வருடங்களுக்கு முன்னர், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குடும்பம் ஜெயவேலுவுடையது. குழந்தைகளைப் பிச்சை எடுக்கச்செய்து குடிப்பதுதான் பெரும்பாலான பெரியவர்களின் தொழில். நாட்டின் குடிமக்கள் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இவர்களிடம் இல்லை. இப்படி ஒரு சமூகம் இருப்பதாக, அரசின் எந்தப் பதிவேட்டிலும் பதிவுகள் இல்லை. நீண்ட முடி வளர்த்து, கசங்கிக் கிழிந்த உடைகளை அணிந்து, குழந்தைகளை அகோரமாக்கிப் பிச்சை எடுக்கவைத்து, அன்றைய நாளின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியையுமே இலக்காகக்கொண்டு வாழும் இந்தச் சமூகத்தில் பிறந்த ஜெயவேல், இன்று லண்டன் கிளிண்ட்வர் யுனிவர்சிட்டியில் (Glyndwr University) ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் முடித்திருக்கிறார். அடுத்தகட்டப் படிப்புக்காக, இத்தாலிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார்.
இவரின் அம்மா லட்சுமிக்கு, சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை பிளாட்பாரம்தான் இப்போதும் வீடு. தன் வாழ்நாள் உடைமையான ஒற்றைப் பையை தலைக்கு வைத்துக்கொண்டு, கிழிந்த பாயில் படுத்திருக்கிறார். தன் மகன் எட்டிப் பிடித்திருக்கும் உயரம் பற்றி எதுவும் அந்தத் தாய்க்குத் தெரியவில்லை.
ஜெயவேலின் வாழ்க்கையை மாற்றியவர் உமா. `சிறகு' என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தும் இவர், குழந்தைத் தொழிலாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறார். ஓர் ஆவணப்படம் எடுப்பதற்காக வந்த இடத்தில் ஜெயவேலுவைப் பார்த்த உமா, அவரை தன் அமைப்பின் மூலம் தத்தெடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
``நாடோடி சமூகமான எங்க மக்களுக்கு, சோறும் சாராயமும் கண்ட இடம் சொர்க்கம். குழந்தைகளைப் பிச்சை எடுக்கவைக்கிறதுதான் வாழ்வாதாரம். எனக்கு முன்னாடி யாரும் ஸ்கூல் வாசலைக்கூட மிதிச்சது இல்லை. எனக்கு மூணு அக்கா, ஒரு தம்பி. அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். அயனாவரம் வாட்டர் டேங்க் பக்கத்துல ரோட்டோரத்துல இருந்தோம். பக்கத்துல இருக்கும் சிக்னல்ல நின்னு, வர்றவங்க...போறவங்ககிட்ட காசு கேட்பேன். கிடைச்ச காசை அம்மாகிட்ட கொடுத்தா, `போயி, சாராயம் வாங்கிட்டு வா'னு அனுப்பும்.
எங்க மக்களைப் பத்தி ஏதோ படம் எடுக்கிறோம்னு உமா மேடம் வந்தாங்க. எங்க ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவங்களை விரட்டினாங்க. எல்லாரையும் சமாதானப் படுத்தி, எங்ககூடவே தங்கி, வீடியோ எடுத்தாங்க. எங்க வாடை பட்டாலே முகம் சுளிக்கிற மனுஷங்களைத்தான் நாங்க பார்த்திருக்கோம். ஆனா உமா மேடம், எங்களை அவங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு கொடுத்தாங்க. எங்க மக்களுக்கு அவங்க மேல பெரிய மரியாதை வந்தது.
அவங்கதான் என்னை ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. அதுவும் தனியார் பள்ளி. கிழிஞ்சுபோய் அழுக்குப் படிஞ்ச டவுசரோட, பரட்டைத்தலையோட அலைஞ்ச எனக்கு, முடிவெட்டி, ஷூ, சாக்ஸ், டை எல்லாம் போட்டு, ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டாங்க. என்னைப் பார்த்து என் தம்பியும் ஸ்கூலுக்கு வந்தான். அம்மாவுக்கு, நாங்க ஸ்கூலுக்குப் போறது பிடிக்கலை. சிக்னலுக்குப் போகச்சொல்லி விரட்டும். உமா மேடம் தேடி வர்றப்போ, ரெண்டு பேரையும் ஒளிச்சுவெச்சுடும். ஒருநாள் உமா மேடம் வந்து, என்னை அவங்க வீட்டுக்கே தூக்கிட்டுப் போயிட்டாங்க'' என, சின்னச் சிரிப்புடன் பேசுகிறார் ஜெயவேல்.
``நான் ஜெயவேலுவை `அந்நியன்'னுதான் அழைப்பேன். `ஸ்லுக்குப் போறியாடா?'னு கேட்டவுடனே, `போறேன்'னு சொல்லி, என்கூட ஒட்டிக்கிட்டான். ஆனா, அவன்தான் அந்தக் குடும்பத்தோட வாழ்வாதாரம். அப்பா, அம்மா யாரும் வேலைக்குப் போறது இல்லை. அவங்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே இல்லை. குழந்தைகள் இயந்திரம் மாதிரி... அவங்களை எதற்காகவும் இழக்க விரும்ப மாட்டாங்க. முதல் வேலையா, ஜெயவேலுவைத் தூக்கிக்கிட்டு வந்து என் கூடவே வெச்சுக்கிட்டேன்.
அவனைப் பார்த்து மத்த பிள்ளைகளும் படிக்க வரும்கிற எண்ணத்துலதான் அப்படிப் பண்ணினேன். ஜெயவேலும் ரொம்ப ஈடுபாட்டோடு படிச்சான். மதிப்பெண்ணை இலக்கா வைக்காம, வாய்ப்புகளையும் அதை எட்டிப்பிடிக்கும் வழிமுறைகளையும் கத்துக்கொடுத்தோம். ஜெயவேலுவோட தம்பி ஆறுமுகமும் இங்கேதான் படிச்சான். ஆனா, அவங்க அம்மா சண்டைபோட்டு அவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. ஜெயவேலுவை, நான் அனுப்ப மறுத்துட்டேன். அவனுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு, அப்பப்போ போய் அம்மாவைப் பார்த்துட்டு வருவான்.
பத்தாம் வகுப்புல கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினான். ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு எழுதினான். ஆங்கிலம், கணிதப் பாடங்களில் ரொம்பத் திறமையா இருந்தான். ஜெயவேலு ப்ளஸ் டூ முடிச்சதும், ஜப்பான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்துல 100 சதவிகித உதவித் தொகையோடு என்விரான்மென்டல் சயின்ஸ் படிக்கவும், சுவிட்சர்லாந்துல இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் எலெக்டிரிக்கல் படிக்கவும் வாய்ப்பு வந்தது. அவனுக்கு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பதுதான் கனவு. அதுக்காக, வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துட்டு, லண்டன் கிளம்பிட். டான். முழுத்தொகையையும் `சிறகு' அமைப்பே கல்விக்கடனாக வழங்கியது. `உன்னோட மக்களை மாத்தணும்னா, நீ வெளிநாட்டுக்குப் போய் படிச்சு, உயர்வான வேலைக்குப் போகணும்'னு சொல்வேன். அதை முழுசா உள்வாங்கிக்கிட்டு, இப்போ பெரிய உயரத்துக்கு வந்திருக்கான் ஜெயவேல்'' எனப் பெருமிதம்கொள்கிறார் உமா.
“நான் வளர வளர, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. எல்லாமே எனக்குப் புதுசா இருந்தது. `நான் எல்லாம் வெளிநாடு போய் படிக்க முடியுமா?'னு மனசுக்குள்ள கேள்வி... `தைரியமா கிளம்பு!'னு சொல்லி அனுப்பிவைச்சாங்க. லண்டன்ல, மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்யலாம். கிட்டத்தட்ட மாதம் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதை வெச்சு சாப்பாடு, தங்கும் செலவைச் சமாளிச்சேன். புராஜெக்ட்ல வித்தியாசமான ஒரு காரைத் தயாரிச்சேன். பெட்ரோல், டீசல், சோலார்னு வெளியில் இருந்து வர்ற எந்த எனர்ஜியும் இல்லாம, டயரோட ரொட்டேட்டிங் எனர்ஜியில் 24 மணி நேரமும் ஓடக்கூடிய கார். அதை இன்னும் மேம்படுத்தணும். இப்போ இத்தாலியோட டாப் ரேங்கிங் யுனிவர்சிட்டியான டோரினா யுனிவர்சிட்டியில் முழு உதவித்தொகையோடு படிக்கப்போறேன்.
எங்க சமூகத்துல எனக்குப் பிறகு நிறையப் பசங்க, படிக்க ஆரம்பிச்சிருக்காங்க; பிச்சை எடுக்கிறதை விட்டுட்டாங்க. அதே சிக்னல்ல இப்போ புத்தகங்கள், துணிகள்னு விற்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப் பேர் ஆட்டோ ஓட்டுறாங்க. எனக்கு இன்னொரு கனவும் இருக்கு. அம்மா இன்னைக்கும் ஒரு துணிமூட்டையைத் தலைக்கு வெச்சுக்கிட்டு பிளாட்பாரத்துலதான் படுத்துக்கிடக்கு. காலம் கைகூடும்போது, ஒரு வீடு கட்டி அம்மாவை அங்கே கூட்டிக்கிட்டுபோய் வெச்சுக்கணும்'' என்னும் ஜெயவேலுவின் கண்கள் முழுக்கக் கனவுகள்.
நல்லது_நடக்கட்டும்.! 

புதன், 10 ஆகஸ்ட், 2016

குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் : செல்போனுக்கு குறுஞ்செய்தி


நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

 ஆய்வு கூட்டம்


 திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலை கடைகளில் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துதல் தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் பொதுவினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 713 நியாயவிலை கடைகளுக்கும் மின்னணு விற்பனை எந்திரங்கள வழங்கப்பட்டுள்ளன. நியாயவிலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களின் விவரம், செல்போன் எண், ஆதார் எண் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் விவரங்களை விற்பனையாளர் பெற்று விற்பனை எந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறித்து அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

 குடிமை பொருட்கள்


 இதனால் குடும்ப அட்டைகள் தவறான வகையில் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. மேலும் போலி குடும்ப அட்டைகள் கண்டறிய வழிவகை செய்யப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தில் மாவட்ட வாரியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயவிலை கடை விற்பனையாளர்கள் எந்திரத்தை கையாளும் முறைகளை அறிந்து நுகர்வோருக்கு முறையாக குடிமை பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

 கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அசோகன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் மோதல்: உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசு கல்லூரி
திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்ககோரி கடந்த 3–ந் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வணிகவியல் பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கல்லூரியின் வணிகவியல்துறை துணைத்தலைவர் ராமு திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரில், தன்னையும், பேராசிரியர் சண்முகசுந்தரத்தையும், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இதேபோல் கல்லூரி மாணவர் நீல்ஆம்ஸ்ட்ராங் போலீசில் அளித்த புகாரில், தன்னையும், தன்னுடன் படிக்கும் மாணவர்களையும், வணிகவியல் துறை துணைத்தலைவர் ராமு, பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
மாணவர்கள் இடையே நடந்த மோதலால் கடந்த 4–ந் தேதியில் இருந்து கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மோதல் குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்ரிஸ்மார்க்ரெட், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வருகிற 12–ந் தேதி கல்லூரியை மீண்டும் திறப்பது என்றும், மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருத்துறைப்பூண்டி, தொண்டி வழியாக மதுரைக்கு புதிய வழித்தடம் தொடங்கக் கோரிக்கை

நாகப்பட்டினத்தில் இருந்து  கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, தொண்டி, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு பதிய வழித்தடம் தொடக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர். பதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு (சுமார் 250 கி.மீ.) தினசரி அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகை, கும்பகோணம், காரைக்குடி, மதுரை, திருச்சி கோட்டங்களின் சார்பிலும், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாகவும், நாகையில் இருந்து தஞ்சைக்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாகவும், வாகனப் போக்குவரத்தில் மிகவும் சிக்கலான நிலை ஏற்படுகிறது. மேலும் குறித்த நேரத்தில் வாகனங்கள் செல்வதில் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது.

 இதற்கு அடுத்தபடியாக மதுரையில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி,  பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி வழியாக சில வழித்தடங்களும்  இயக்கப்படுகிறது. இதுவும் ஏறத்தாழ 250 கி.மீ. தூரம்தான்.

 இதைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில் இருந்து, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று, திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு புதியவழித்தடம் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தென்மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹா, மற்றும் நவகிரக தலங்கள், சஷ்டியப்த பூர்த்தி நடைபெறும் திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் வருபவர்கள் இந்த வழியையே விரும்புகின்றனர்.

இந்த வழித்தடத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு 250 கி.மீ. தூரமே ஆகும்.  மேலும் போக்குவரத்து நெருக்கடியான சூழல் இல்லாத நிலை உள்ளதால் நாகையில் இருந்து திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை வழியாக போக்குரத்து நெருக்கடியில் சிக்கித்தவித்து கூடுதல் காலவிரயத்தைத் தவிர்க்கும்  வகையில் இந்த புதிய வழித்தடத்தில் மதுரைக்கு பேருந்தை இயக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சனி, 6 ஆகஸ்ட், 2016

Yahoo வின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் : ஹீரோவிலிருந்து ஜீரோ

Yahooஒரு காலத்தில் இணையம் என்றாலே அது Yahoo தான் என்றிருந்தது. மிகப் பெரிய இணையத்தள பூதமாக இருந்த Yahoo, பல நிறுவனங்களை வாங்கும் அளவிற்கு இருந்த Yahoo, இன்று தனது மதிப்பை இழந்து வெறும் $4.8 பில்லியன் டாலருக்கு Verizon நிறுவனம் வாங்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. எல்லா விசயங்களையும் Yahoo வில் தேடிய காலம் மாறி, யாகூவை கூகுளில் தேடும் காலம் உருவானது.
1994-ம் ஆண்டு டேவிட் பிலோ மற்றும் ஜெர்ரி யாங் என்பவர்களால்  “Jerry and David’s Guide to the World Wide Web” என்ற சர்ச் இஞ்சின் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் Yahoo என மாற்றப்பட்டது.

யாகூ நியூஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ், இமெயில், சமூக தளங்கள், விளம்பரங்கள், யாகூ ஃபோட்டோஸ், என எல்லாவற்றையும், ஒருங்கிணைத்தது யாகூ. எல்லா தகவல்களையும் அதன் தளத்திலேயே இடம்பெறச் செய்தது. ஆனால், அதுதான் பலருக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணமாய் அமைந்தது.
Yahoo ஒரே தொழில் மாதிரியை கடைபிடிக்காமல், தாங்கள் ஊடக (media) நிறுவனமா அல்லது ஒரு தொழில்நுட்ப நிறுவனமா (technology company) என்ற கேள்விகளுக்கு தெளிவில்லாமல் இருமுகதன்மையை பின்பற்றியது.
1998 ஆம் ஆண்டு கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜெரி ப்ரினும்அவர்களின் PageRank system தொழில்நுட்பத்தை யாகூவிடம்  $1 மில்லியன் டாலருக்கு விற்க முயன்றனர். அவர்களின் PageRank system தொழில்நுட்பம் மிக விரைவாக தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுக்கும். ஆனால் Yahoo நிறுவனம் எல்லா தகவல்களையும் தங்கள் தளத்திலேயே இடம்பெற செய்து இணைய பயனர்கள் தங்கள் தளத்திலேயே அதிக நேரம் செலவிடவேண்டும் என்று எண்ணி Google ன் PageRank system தொழில்நுட்பத்தை நிராகரித்தது.
ஆனால் Yahoo தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுத்தலில்தான் மிகப் பெரிய சந்தை இருக்கிறது என்பதை கவனிக்க தவறிGoogle –ளிடம் தனது பயனர்களை பறிகொடுத்தது.
2000 ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் சந்தை மதிப்பு $125 பில்லியன் டாலர். யாஹூ மிகவும் உச்சத்திலிருந்த தருணம் அது.
2001 ஆம் ஆண்டு Yahoo கிட்டத்தட்ட 400 வெவ்வேறு விதமான சேவைகளை கொண்டிருந்தது. ஆனால் Google தேடு பொறி என்ற ஒரே துறையில் கவனத்தை குவித்தது போல, Yahoo ஒரே துறையில் கவனத்தை (focus) குவிக்கவில்லை.  
2002 ஆம் ஆண்டு Yahoo நிறுவனம் கூகுளை $1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்க தாயராக இருந்தது. கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜிபிரின் $3 பில்லியன் டாலர் தொகை கேட்டனர். முன்னாள் யாகூ சிஇஓ Terry Semel இது சரியான விலை என நம்பினார்.
ஆனால் Semel ன் தளபதிகள் சிலர் $3 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கும் அளவிற்கு Google ன் மதிப்பு இல்லை என கூறினர். இதனால் Yahoo நிறுவனம் google ஐ வாங்குவதை கைவிட்டது. ஆனால் இந்த இளம் Google நிறுவனம் தன்னையே இணையத்திலிருந்து வெளியே விரட்டிவிடும் என யாஹூ கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
2005 ஆம் ஆண்டு யாஹூ நிறுவனம் இப்போது உலகின் மிகப் பெரிய இணையத்தள நிறுவனமான Alibaba -வில் $1 பில்லியன் டாலர் முதலீட்டு செய்து 40% பங்கை வாங்கியது. 
இப்பொழுது உள்ள யாஹூவின் சொந்த மதிப்பை விட அது Alibaba -வில் செய்த முதலீட்டின் இன்றைய மதிப்பு அதிகமாகும்.  
அதே ஆண்டில் Yahoo படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான Flickr-ஐ $25 மில்லியன் டாலருக்கு வாங்கியது. 
2006 ஆம் ஆண்டு Yahoo Facebook ஐ  $1 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்க தயாராக இருந்தது. Facebook ன் முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் யாஹூவிடம் விற்பதற்கு விரும்பும் தெரிவித்தனர். Facebook அந்த சமயத்தில் News Feed -ஐ அறிமுகம் செய்திருந்தது. அது நன்றாக சென்றால் Facebook ன் மதிப்பு $1 பில்லியன் டாலரைவிட அதிகமாக இருக்கும் என மார்க் ஜுக்கர்பெர்க் நம்பினார். ஆனால் யாஹூ Facebook ஐ அதிகமான விலைக்கு வாங்க தயாராக இல்லை. எனவே மார்க் ஜுக்கர்பெர்க் அதை நிராகரித்தார்.
இன்று Facebook தன்னை வாங்க நினைத்த Yahoo வை விட மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. 

 
2008 ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் $44.6 பில்லியன் டாலர் தொகைக்கு யாகூவை வாங்க தயாராக இருந்தது. ஆனால், இந்த விலை மிகவும் குறைவு என நினைத்த யாகூ அதனை நிராகரித்தது. ஆனால் இதை விட மிகக் குறைந்த விலைக்கு விற்க போகிறோம் என்பதை Yahoo அன்று அறிந்திருக்கவில்லை.
2012 வரை குறுகிய காலத்தில் யாஹூவில் பல தலைமை செயல் அதிகாரிகள் (CEO) மாற்றப்பட்டனர். சிஇஓ க்கள் மாறியும் யாஹூ வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை அதனால் திருப்தி அடையாத முதலீட்டாளர்கள் மற்றும்  இயக்குனர்கள் கூகுள் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்த Marissa Mayer ஐ சிஇஓ வாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த யாஹுவை மரிசா மேயராலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லமுடியவில்லை.
2013 ஆம் ஆண்டு microblogging மற்றும் சமூக வலைத்தளமான Tumblr தளத்தை 1.1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது யாகூ. ஆனால் Tumblrதளமும்  வீழ்ச்சியை சந்தித்தது. 
இப்போது மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனமான Verizon  $4.8 பில்லியன் டாலருக்கு Yahoo ஐ வாங்கியிருக்கிறது. மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த யாஹூ படிப்படியாக வீழ்ந்து இன்று அடிபாதாளத்திற்கு சென்றுள்ளது. இணையத்தை தன் கையில் வைத்திருந்த Yahoo வின் தோல்வி நிச்சயம் மற்ற இணையம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.  

Tks

tnentrepreneur.com

புதன், 13 ஜூலை, 2016

பெண்களின் ஆரோக்கியம்!

ஐ.நா.வின் உலகச் சுகாதார நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு "சர்வதேச மகளிர் நல மகப்பேறு மேம்பாட்டு மையம்'. இம்மையம் பெண்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது. மகப்பேறு சார்ந்த ஆய்வின்போது அதற்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றன. ஆய்வுத் தகவல்கள் வருமாறு:
 * உலகில் நோய்களின் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்கு காரணம், பெண்களுக்கான பிரச்னைகள், சக ஆண்களால் அலட்சியப்படுத்தப் படுவதே!
 * இன்று பிரசவம் சார்ந்து பல முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும் அந்த வசதிகள் அனைவரையும் சென்று அடைவதில்லை. உதாரணமாக 2013-இல் மட்டும் மூன்று லட்சம் பெண்கள் கர்ப்பம் சார்ந்த சிக்கல்களால் இறந்துள்ளனர்.
 * கருத்தரிக்காமல் இருக்க பயன்படும் சாதனங்கள் சுமார் 23 கோடி மக்களுக்கு கிடைக்கவே இல்லை.
 கர்ப்ப சிக்கல்கள்
 * ஆண்டுதோறும் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களில் 1.3கோடி பேர் குழந்தை பெறுகிறார்கள்.
 * கர்ப்பம் சார்ந்த மற்றும் குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள் மூலமாக ஏராளமான இளம் பெண்கள் இறந்து போகின்றனர். பாதுகாப்பற்ற கருச்சிதைவு மூலமும் பல பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
 வீட்டில் சிக்கல்
 * 50 வயதுக்கு உட்பட்ட பெண்களிலும் கூட 3-இல் ஒருவருக்கு வீட்டில் நேரடி மற்றும் மறைமுக செக்ஸ் பலாத்காரம் நடக்கிறது.
 செக்ஸ் கொடுமைகளால் வரும் தொத்துகள்
 * மேகவெட்டை நோய், சாலம்டியா நோய் போன்றவற்றைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது அவசியம்.
 வெளிப்படுத்த இயலாத வியாதிகள்
 * வெளியில் சொல்ல இயலாத நோய்களால் 2012 - ஆம் ஆண்டில் மட்டும் 70 வயதுக்கு உட்பட்டோர் 47 லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள்.
 * பெரும்பாலான சாவுகள் சாலை விபத்துகள், புகையிலை, மது, போதை மருந்து மற்றும் உடல் பெருக்கம் மூலமே நிகழ்கின்றன.
 புற்று நோய்
 * ஒவ்வோர் ஆண்டும் அரை மில்லியன் மக்கள், கழுத்து மற்றும் மார்பக புற்று நோயினால் இறக்கின்றனர்.
 * இவற்றை சோதிக்கவும், சிகிச்சை எடுக்கவும் வசதியில்லாத நாடுகளில் தான் மேற்கண்ட நோய்களால் மிக அதிகம் பேர் இறக்கின்றனர்.
 மன ஆரோக்கியம்
 * கவலை, மன இறுக்கம் மற்றும் உடல் கூறு சார்ந்த தொல்லைகள் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் நேர்கின்றன. இவற்றில் மன இறுக்கம் பெண்களை படாதபாடு படுத்துகிறது.
 * 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மேற்கூரிய காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக நிகழ்கிறது.
 வயதாவது பற்றி
 * ஆண்களைப் போன்று பெண்களுக்கு பென்ஷன் கிடையாது. மருத்துவ வசதிகளுக்கும் தனிப்பட்ட முறையில் வாய்ப்பு இல்லை. இதனால் வயதாகும்போது பெண்கள் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
 * வயதான காலத்தில் உணவுக்கு வழி இல்லாமல் போகும் போதும், வயதானதால் வரும் வியாதிகளைச் சமாளிக்க இயலாமல் போகும்போதும் மனம் பேதலித்து; பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு.
 ஆக மேலே கூறியவையெல்லாம் உணர்த்துவது என்ன? பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் சமூகத்தால் நன்கு கவனிக்கப்பட வேண்டும். வேண்டும் என்பதே!
 - ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

குரும்பல் ரெயிலடி தெருவை சேர்ந்த; டிரைவர் பலி; மனைவி படுகாயம் கார் மோதியது

திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலியானார். இந்த விபத்தில் இவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

அரசு பஸ் டிரைவர் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது54). இவர் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கஸ்தூரி(50). நேற்றுமுன்தினம் இவர்கள் மாங்குடியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மனைவி படுகாயம் 

அப்போது கரும்பியூர் கொடிமரம் என்ற இடத்தில் பின்னால் வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்பழகன், கஸ்தூரி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக இறந்தார். கஸ்தூரியை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அண்ணாத்துரை (36) என்பவரை கைது செய்தனர்.

அண்ணாநகர் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருத்துறைப்பூண்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ரமேஷ் (வயது36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், சதீஷ், சங்கர், முனியப்பன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று ரமேஷ் அங்குள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து ரமேசை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 11 ஜூலை, 2016

திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு விடுதிகள், பழக்கடைகள் போன்றவற்றில் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், அன்பழகன் ஆகியோர் சோதனை செய்தனர்.

பேருந்துநிலையம் மற்றும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடைகளில் இருந்த காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த சோதனையில் தாசில்தார் (பொ) அன்பழகன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், காரல்மார்க்ஸ், சிவக்குமார், வசுமதி, வருவாய் ஆய்வாளர்கள் சிவதாஸ், முருகேசன், ஜோதிபாசு, பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்  : மத்திய  அரசின்  திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். நகர்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மத்திய அரசால் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் வகையில் பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடனுடன் கூடிய வட்டி மானியமாக ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5 சதவீதத்துக்கு   மேற்படும் வட்டிக்கு மானியத்துடன் அதிகப்பட்சமாக 323 சதுரஅடி பரப்பளவிலும், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு 646 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் நகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் தகுதியுள்ளவர்கள் சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரை தொடர்புகொண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெகடர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

சனி, 9 ஜூலை, 2016

காலாவதி பொருட்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைகளில் காலாவதி
பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், உணவு விடுதிகள், பழக்கடைகள் போன்றவற்றில் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், அன்பழகன் ஆகியோர் சோதனை செய்தனர்.

பேருந்துநிலையம் மற்றும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடைகளில் இருந்த காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த சோதனையில் தாசில்தார் (பொ) அன்பழகன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், காரல்மார்க்ஸ், சிவக்குமார், வசுமதி, வருவாய் ஆய்வாளர்கள் சிவதாஸ், முருகேசன், ஜோதிபாசு, பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மின்வாரிய அலுவலரின் வீடு புகுந்து பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மின்வாரிய அலுவலரின் வீடு புகுந்து பெண்களிடம் 5 பவுன் நகையை திருடி சென்றனர். இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த கணவன்–மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மின்வாரிய அலுவலர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது55). மின்வாரிய அலுவலர். சம்பவத்தன்று இரவு குணாளன், அவருடைய மனைவி கவிதா(30), மகன் முத்துக்குமார், குணாளனின் தாயார் ராஜம்பாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 12 மணியளவில் 3 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதை கேட்டு கண் விழித்த ராஜம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துள்ளனர். இதனால் அவர் சத்தம் போட மருமகள் கவிதா ஓடிவந்துள்ளார். அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் நகையையும் பறித்தனர். இவர்கள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டிரைவர் நாராயணதாஸ், அவருடைய மனைவி கனகவள்ளி ஆகியோர் ஓடிவந்தனர்.

அப்போது மர்மநபர்கள் கட்டையால் 2 பேரையும் தாக்கினர். இதில் இதில் படுகாயம் அடைந்த நாராயணதாஸ், கனகவள்ளி ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மர்மநபர்கள் 5 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து குணாளன், அவருடைய மனைவி கவிதா ஆகியோர் ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பவுன் நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திங்கள், 4 ஜூலை, 2016

திருத்துறைப்பூண்டி அருகே வேலித்தகராறு :3 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது56). விவசாயி. இவருக்கும், அதே தெருவை
சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் இடையே வேலித்தகராறு இருந்து வந்ததுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் வேலியில் இருந்த பூவரசன் மரத்தை வெட்டியதாக தெரிகிறது. இதையடுத்து நாகராஜன், அவருடைய தம்பி காத்தவராயன், அவருடைய மனைவி பாரதி ஆகியோருக்கும், விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன் மண்வெட்டியால் விஜயகுமாரை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகுமார் ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நாகராஜன், காத்தவராயன், பாரதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tks

daily thanthi 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

 2011 ஜூன் 30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று பள்ளியிறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45, இதர வகுப்பினர் 40 வயதுக்குள், பயனாளிகளின் குடும்ப வருமானம் ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.  பதிவு செய்து 2016 ஜூன் 30-ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது.  தொகைத்தூரக் கல்வி படிப்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார்துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது.

 முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் 2016 ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

 உதவித்தொகை ஏற்கெனவே பெற்றுவருபவர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தெடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

 அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தவறாமல் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.

சனி, 2 ஜூலை, 2016

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளிப்பு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டார விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் வெள்ளிக்கிழமை துணை வட்டாட்சியரிடம் வழங்கினார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் ஆண்டிற்கு 200 நாள்கள் வேலை வழங்கி ரூ.400 ஊதியம் வழங்க வலியுறுத்தல், தலித் ஆதிவாசிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தல், கெளரவ கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வூதியச் சட்டம் இயற்றி ரூ.3000 வழங்க வலியுறுத்தல், நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு 5 சென்ட நிலம் வழங்கி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டித்தரக் கோருதல்  உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை வட்டாட்சியர் மூலம் பிரதமருக்கும், முதல்வருக்கும் அனுப்பக்கோரி மனு அளிக்கப்பட்டது.

 கே.உலகநாதனுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர்கள் அ.பாஸ்கர், கே.முருகையன், நகர செயலர் எம்.முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எல்.பக்கிரிசாமி, ஏ.மூர்த்தி, ஆர்.வாசுதேவன், பி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

மாணவியை கடத்திச் சென்ற காதலன் கைது

மன்னார்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோட்டூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட மேலபனையூர் கீழத்தெரு,சுந்தரமூர்த்தி மகன் ரவிச்சந்திரன்(26) பொறியியல் பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ரவிச்சந்திரனும், பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனராம்.

இந்நிலையில் சென்ற ஜுன் 1-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்றும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரவிச்சந்திரன் கடத்திச்  சென்றுவிட்டதாக மாணவியின் பெற்றோர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனராம். அதனை அடுத்து கோட்டூர் காவல் ஆய்வாளர் லெட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸார் தேடிவந்த நிலையில் குமாரப்பாளையத்தில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வியாழக்கிழமை இரவு போலீஸார் கைது செய்து கடத்தி வைத்திருந்த மாணவியை மீட்டனர்.

பின்னர் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், ரவிச்சந்திரனை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

நகை பறித்த திருடனை விரட்டிப் பிடித்த மக்கள்

திருவாரூரில் புதன்கிழமை பெண்ணிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மனைவி கமலாம்பாள் (60). இவ புதன்கிழமை வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு வந்து, மன்னார்குடி பேருந்தில் ஏறும் போது இளைஞர் ஒருவர் ரூ. 60,000 மதிப்புள்ள 3 தங்கச் செயின் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்து கமலாம்பாள் கூச்சலிட்டதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரை பிடித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் நகையை திருடி தப்பியோடியவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை  மீட்டனர்.

புதன், 18 மே, 2016

தேர்ச்சி சதவீதம்: +2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்துக்கு எந்த இடம் ?

File:Sad-face.jpg
  • பிளஸ் 2 தேர்வில் 96.92 % பேர் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் ., நம் மாவட்டத்துக்கு கடைசி (க்கு முதல் ) இடம் !!!???











SI.NO மாவட்டம் சதவீதம்
1  ஈரோடு  96.92
2  பெரம்பலூர்  96.73
3  விருதுநகர்  95.73
4  கன்னியாகுமரி  95.7
5  தூத்துக்குடி  95.47
6  திருப்பூர்  95.2
7  தேனி  95.11
8  சிவகங்கை  95.07
9  ராமநாதபுரம்  95.04
10  திருநெல்வேலி  94.76
11  திருச்சி  94.65
12  நாமக்கல்  94.37
13  கோவை  94.15
14  கரூர்  93.52
15  மதுரை  93.19
16  புதுக்கோட்டை  93.01
17  சென்னை  91.81
18  ஊட்டி  91.29
19  சேலம்  90.9
20  காஞ்சிபுரம்  90.72
21  திருவண்ணாமலை  90.67
22  அரியலூர்  90.53
23  திண்டுக்கல்  90.48
24  தர்மபுரி  90.42
25  தஞ்சாவூர்  90.14
26  விழுப்புரம்  89.47
27  பாண்டிச்சேரி  87.74
28  திருவள்ளூர்  87.44
29  நாகப்பட்டினம்  86.8
30  கிருஷ்ணகிரி  85.99
31  கூடலூர்  84.63
32  திருவாரூர்  84.18
33  வேலூர்  83.13

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka