திங்கள், 23 பிப்ரவரி, 2015

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த புதுமாப்பிள்ளையின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்



விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த புதுமாப்பிள்ளையின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

புதுமாப்பிள்ளை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூர் ராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(வயது37). இவர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் குன்னூரை அடுத்த கள்ளிக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெங்கட்ராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வெங்கட்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் உறுப்புகள் தானம்

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ராஜ் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து வெங்கட்ராஜின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவருடைய உடலில் இருந்து இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka