புதன், 11 பிப்ரவரி, 2015

மூதாட்டி மீது மோதிய கார் தாறுமாறாக ஓடி ஏரியில் பாய்ந்தது என்ஜினீயர் உள்பட 2 பேரும் பலியான பரிதாபம்




மன்னார்குடி அருகே மூதாட்டி மீது மோதிய கார் தாறுமாறாக ஓடி ஏரியில் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த என்ஜினீயர் மற்றும் மூதாட்டி பரிதாபமாக இறந்தனர்.

சென்னை என்ஜினீயர்

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப்ஆனந்தராஜ் (வயது42). என்ஜினீயர். இவர் நேற்றுமுன்தினம் சொந்தவேலை காரணமாக சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு காரில் புறப்பட்டார். நள்ளிரவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுந்தரக்கோட்டை மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மீது கார் மோதியதாகவும், இதைதொடர்ந்து ஜோசப்ஆனந்தராஜ் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கூப்பாச்சிகோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது மோட்டார்சைக்கிளில் சென்ற பரவாக்கோட்டையை சேர்ந்த வினோத்குமார் (28) என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த ஏரி தண்ணீருக்குள் பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி படுகாயம் அடைந்த ஜோசப்ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார்சைக்கிளில் வந்த வினோத்குமார் காயம் அடைந்தார்.

போலீஸ் விசாரணை

முன்னதாக சுந்தரக்கோட்டை மெயின் சாலையில் மூதாட்டி மீது மோதிய கார் ஒன்று நிற்காமல் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே கூப்பாச்சிக்கோட்டையில் நடந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் கூப்பாச்சிக்கோட்டை சென்று விபத்துக்குள்ளான காரை மீட்டபோது, அந்த கார் தான் மூதாட்டி மீது மோதியது என்பதும், காரில் வந்தவர் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது.

கார் மோதியதில் காயம் அடைந்த வினோத்குமார் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலையும், சென்னையை சேர்ந்த என்ஜினீயர் ஜோசப்ஆனந்தராஜின் உடலையும் போலீசார் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka