வெள்ளி, 20 மார்ச், 2015

முத்துப்பேட்டையில் 2-வது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை


முத்துப்பேட்டையில் நேற்று 2-வது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை தடுத்து முறியடிப்பது குறித்து 36 மணி நேர தீவிரவாத தடுப்பு ஒத்திகை என்னும் ஆப்ரேஷன் ஆம்லா நேற்றுமுன்தினம் தொடங்கியது. 14 கடலோர மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகையில் கடலோர காவல் படையும், தமிழக போலீசாரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இதில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்த ஒத்திகையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போலீஸ்துறை சார்பில் செய்யப்பட்டது. இதனையடுத்து கடலோர பகுதியான கரையங்காடு முதல் இடும்பாவனம், தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை

இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் முத்துப்பேட்டை, இடும்பாவனம், கோபாலசமுத்திரம், பேட்டை, லகூன் ஆகிய பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களின் படகுகளையும் சோதனை செய்தனர். மேலும் அலையாத்திகாடு பகுதிக்கு வந்த சுற்றுலாபயணிகளையும் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

முத்துப்பேட்டை பகுதி தமிழகத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. மேலும் கடலோர பகுதியான அலையாத்திகாடு, லகூன் போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் ஆப்ரேஷன் ஆம்லா சோதனைக்காக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களிடமும், மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமாக யாராவது தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka