வியாழன், 7 ஏப்ரல், 2016

முறைப்படி வாக்களிப்பதே நம் நாட்டுக்கு நாம் செய்யும் கடமை-மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்

Image result for எம். மதிவாணன்ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதே நம் நாட்டுக்கு நாம் செய்யும் கடமை என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

திருவாரூர் அருகேயுள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பேரவைத் தேர்தல் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது: 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை. மாணவர்கள் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் குறித்து எந்தெந்த படிவங்கள் உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்குகளை விலைக்கு விற்காமல் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதே நம் நாட்டுக்கு நாம் செய்யும் கடமை என்பதை மாணவ, மாணவிகள் அறிவது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

வாக்காளர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களது தார்மீக உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாக்களிப்பது நல்ல மக்களாச்சியை உருவாக்குதற்கு வழிவகை செய்யும் என்றார் மதிவாணன்.

முன்னதாக, மாணவர்கள் ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம் என உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, மாணவர்களின் தேர்தல் குறித்து பேச்சுப் போட்டி, நாடகம், குறுநாடகம், பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன், திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, பாரத் கல்விக் குழும நிறுவனர் கலைக்கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka