சனி, 16 ஏப்ரல், 2016

மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பலி தனியார் பஸ் மோதியது

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் அருகே தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

விவசாய தொழிலாளர்கள்

நாகை மாவட்டம் எட்டுக்குடியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 40). அதே பகுதியில் உள்ள திருவாய்மூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (45). ஆந்தக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (38). இவர்கள் 3 பேரும் விவசாய தொழிலாளர்கள் ஆவர். நேற்று மாலை இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகன்நாதன், அண்ணாதுரை, ஸ்டீபன்ராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

போலீசார் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka