செவ்வாய், 3 ஜனவரி, 2017

22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன்

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தெரிவித்தார்.


பேட்டி

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 189 திருட்டு, 37 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இதில் 75 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக 5 கொலை முயற்சி மற்றும் 20 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சாதி ரீதியான கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. காயம் அடைந்ததாக 408 வழக்குகள் மற்றும் வாகன விபத்து சம்பந்தமாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

22 பேர் மீது குண்டர் சட்டம்

விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்காக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவுடன் விசாரித்து மேல் நடவடிக்கைக்கு உரிய வழிகாட்டுதல் செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 911 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 288 இடங்கள் கண்டறியப்பட்டு கேமிரா பொருத்தப்பட உள்ளன. பொதுமக்கள் குற்றம் சம்பவங்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க தொடங்கப்பட்ட ஹலோ போலீஸ் என்ற பிரிவுக்கு 622 அழைப்புகள் வந்துள்ளன. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பிரேமா ஆகியோர் உடன் இருந்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka